Saturday, April 18

இராசநாயகம், செ (முதலியார்)

0

அறிமுகம்

செல்லப்பாபிள்ளை இராசநயாகம் என்னும் பெயருடைய இவர் 1870 -10 – 22 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் நவாலி என்னும் இடத்தில் பிறந்தார். கொழும்பில் உள்ள சென். தோமஸ் கல்லூரியில் கல்வியை முடித்துக்கொண்ட இவர், தனது 19 ஆவது வயதில் அரசாங்க சேவையில் எழுதுவினைஞராகப் பணியில் அமர்ந்தார். இக்காலத்தில் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்த இவருக்கு 1920 இல் முதலியார் தரத்துக்குப் பதவி உயர்வு கிடைத்தது. 1923 ஆம் ஆண்டில் மீண்டும் பதவி உயர்வு பெற்று இலங்கை குடிசார் சேவையில் பணியாற்றினார். அவ்வாண்டிலிருந்து யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்த இராசநாயகம் 1929 ஆம் ஆண்டில் அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.

ஆய்வு முயற்சிகளில் இராசநாயகம்

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய காலத்தில் யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பழைய தமிழ் இலக்கியங்களையும், பிற வரலாற்றுச் சான்றுகளையும் ஆய்வு செய்த இவர் அவ்வாய்வு முடிவுகளை ஒரு ஆய்வு நூலாகவே வெளியிட விரும்பினார். இத்தகைய ஆய்வு நூல்கள் ஆங்கிலத்தில் இருப்பது கூடிய பயன் தரும் என்று எண்ணிய அவர் யுnஉநைவெ துயககயெ (பண்டைய யாழ்ப்பாணம்) என்னும் தலைப்பில் 1926 ஆம் ஆண்டில் வெளியிட்டார். எனினும், மாணவர்களும் ஆங்கிலம் தெரியாத பிற தமிழரும் இலகுவாக வாசித்து அறிந்து கொள்ளக்கூடிய வகையில் யாழ்ப்பாண வரலாறு குறித்த நூலின் ஆய்வு முடிவுகளைச் சுருக்கமாகத் தமிழில் எழுதி 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலாக வெளியிட்டார். யாழ்ப்பாண வரலாறு கூறும் பழைய நூல்களான கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை ஆகியவற்றைத் தேடி இலண்டன் அருங்காட்சியக ஆவணக் காப்பகத்துக்குச் சென்ற இராசநாயகம், அங்கிருந்த அவற்றின் படிகளைப் பெற்று வந்தார். அவற்றில், கைலாயமாலையைத் தனது  குறிப்புக்களுடன் பதிப்பித்து வெளியிட்டார்.

இவை தவிர இராசநாயகம் எழுதிய “கதிர்காமம்” குறித்த ஒரு நூலும் 1930 ஆம் ஆண்டில் வெளியானது. 1934இல், பிரித்தானியர் காலத்தில் யாழ்ப்பாணம் என்னும் நூலொன்றையும் அவர் வெளியிட்டார். அத்தோடு ஆவணக் காப்பகத்தில் இருந்த தமிழ் ஆவணங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாக 1937 இல் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண வரலாற்று ஆய்வுகளுக்கு அவர் நேரடியாகச் செய்த பங்களிப்புகளோடு பிறரையும் இவ்விடயத்தில் அவர் ஊக்குவித்து வந்தார். 1878 இல் எஸ். ஜோன் என்பவர் எழுதி வெளியிட்ட யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் தமிழ் நூலை மீள்பதிப்புச் செய்யும்படி ஜோனின் மகனுக்கு ஊக்கம் கொடுத்தார். அத்துடன், யாழ்ப்பாண வைபவமாலையைக் குறிப்புகளுடன் பதிப்பிக்குமாறு குல. சபாநாதனையும் ஊக்கப்படுத்தினார்.

முதலியார் இராசநாயகம் அவர்களது நூல் பட்டியல்

தமிழ்

  • யாழ்ப்பாணச் சரித்திரம் (1933)
  • கதிர்காமம்
  • யாழ்ப் பாணச் சரித்திரம்-ஆங்கிலேயர் காலம் (1934)
ஆங்கிலம்
  • Ancient Jaffna (1926)
  • Katragama (1930)
மொழிபெயர்ப்பு
  • யாழ்ப்பாண வைபவமாலை
அகராதி
  • தமிழ்நூற் பெயரகராதி
பதிப்பித்த நூல்கள்
  • கதிரை நான்மணி (1938)
  • Historical Manuscripts CommissionBulletin
  • Tamil Documents in the Archives -Selected and Translated (1937)

யாழ்ப்பாண வரலாற்றின் முன்னோடி ஆசிரியராக செ.ராசநாயகம் கருதப்படுகிறார்.  அழிந்து போயிருக்கக்கூடிய பெரும்பாலான தகவல்களை பதிவு செய்து  வரலாற்றின் முன்னோடியான இவர்  1940-01-17 ஆம்  நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!