யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னத்தம்பி அவர்களின் புதல்வராகப் பிறந்தார். அவ்வூரிலேயே கல்வி கற்றுத்தேறி, சில காலம் ஆசிரியப்பணி செய்தார். ஆசிரியப் பணியிலிருக்கும்போதே ஈழத்தில் பெரும் புலவர்களின் அறிமுகத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ் ஆர்வம் பெற்ற இவர் தமிழ்மொழி, தமிழ்நாகரிகம், சிவவழிபாடு ஆகியவற்றின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தமிழ்நாடு சென்று தமிழ்நூல்களை ஆராயும் முயற்சியிலும் ஈடுபட்டார். தொல்பொருள் ஆதாரங்களைப் பெற்று ஆராய்ந்தறிந்தார். இவற்றை ஆதாரமாகக் கொண்டு பல ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டார். தமிழியம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட பல அறிஞர்களுள் ந.சி.கந்தையா அவர்களின் பணி முதன்மையானது. பொது அறிவுத்துறையிலும், அகராதித் துறையிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றார். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி போன்ற அகராதிகள் இவரால் தோற்றம் பெற்றன. ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார். தமிழ்மொழி, தமிழர் வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழகம், தமிழ் இந்தியா, திராவிட நாகரிகம், சிவவழிபாடு, முச்சங்கங்கள், சிந்துவெளி நாகரிகம், தமிழர் ஆரியர் கலப்பு, பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு, புறப்பொருள் விளக்கம், கலிங்கத்துப் பரணி, விறலிவிடுதூது, பெண்கள் உலகம், பெண்கள் சமூகம் அன்றும் இன்றும், பெண்கள் புரட்சி, பொது அறிவு,பொது அறிவு வினா விடை,உலக அறிவியல் நூல், உங்களுக்குத் தெரியுமா, அறிவுக் கட்டுரைகள், நூலகங்கள், அறிவு மாலை, அறிவுரைக் கோவை, தமிழர் சமயம் எது?, சைவ சமய வரலாறு, சிவன், இந்து சமய வரலாறு,தமிழர் பண்பாடு,நமது தாய்மொழி,நமது மொழி,நமது நாடு,திராவிட மொழிகளும் இந்தியும், தமிழ்ப் பழமையும் புதுமையும், முச்சங்கம், தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா?, ஆரியர் வேதங்கள், திராவிடம் என்றால் என்ன?, திராவிட இந்தியா, மறைந்த நாகரிகம், ஆதி மனிதன், ஆதி உயிர்கள், மனிதன் எப்படித் தோன்றினான்?, மரணத்தின் பின், பாம்பு வணக்கம், தமிழர் யார்?, உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு, சிந்துவெளித் தமிழர், தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழர், திருவள்ளுவர், திருக்குறள், தமிழகம், தமிழ் இந்தியா, திருக்குறள் அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, காலக்குறிப்பு அகராதி, செந்தமிழ் அகராதி,கலிவர் யாத்திரை, இராபின்சன் குரூசோ, அகத்தியர், தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், நீதிநெறி விளக்கம் ஆகியன குறிப்பிடத்தக்கன. தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதற்காகத் தமிழ் நாட்டிற்குச் சென்று அங்கு வீரபாகுப்பிள்ளை என்பவரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒற்றுமை நிலையம் மூலமாகத் தனது நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களும் ந.சி.கந்தையா அவர்களுடைய நூல்களை வெளியிட்டன. இவர் தனது 74ஆவது வயதில் 1967 இல் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.