யாழ்ப்பாணம்- நீர்வேலியில் 1914 ஆம் ஆண்டு அருணாசலம் என்பவரது மகனாகப் பிறந்தார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் தனது கல்வியினைப் பெற்றுக் கொண்டார். பலசமய, பல்மொழி, பல்துறை ஆற்றலுடைய இவர் ஆசிரியராகி கல்விப்பணியாற்றியவர். இக்காலத்தில் இவருக்கு ரமண முனிவரின் தொடர்பும், தவத்திரு யோகர் சுவாமிகளின் ஆற்றுப்படுத்தலும் இணைந்து ஆன்மீகத்தில் ஈடுபடவைத்ததெனலாம். தனது ஆசிரியத்தொழிலைத் துறந்து துறவறத்தில் ஈடுபடலானார். யோகர் சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் வாழ்ந்து அந் நிலையத்தினை வழிப்படுத்திய இவர் சிவதொண்டன் என்ற சஞ்சிகையின் ஆசிரியராகக் கடமையாற்றினார். அச் சஞ்சிகையில் சிவசிந்தனை என்றபெயரில் ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளார். சுவாமிகள் புகழுரையை விரும்புவதுமில்லை, புகழ எவரையும் விடுவதுமில்லை. எப்பொழுதும் தனது குருநாதரின் சிந்தனையில் வாழ்ந்து சிவசிந்தனையை மக்கள் மத்தியில் தினமும் வளர்த்து வந்த சுவாமிகள் 2006 ஆம் ஆண்டு மகாசமாதியடைந்தார்.