1945.08.07ஆம் நாள் அழகொல்லை அளவெட்டி வடக்கு என்னும் இடத்தில் பிறந்து பயிற்றப்பட்ட சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.தனது ஆறாவது வயதில் இசையைக் கற்கத்தொடங்கியவர். பாடசாலைப் பருவத்தில் இசைப் போட்டிகளில் பங்குபற்றி முதல் தரத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப இசையை இவர் மறைக்காடர் என்ற ஓதுவாரிடமே பயின்றவர். பின்னர் மகாராஜபுரம் விஸ்வநாதஐயரின் மகனான சந்தானம் அவர்களிடம் இரு வருடங்கள் பயின்றவர். இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் சாம்பமூர்த்தி, சென்னை கர்நாடக இசைக் கல்லூரி அதிபர் ஸ்ரீனிவாசராவ் ஆகிய இரு பரீட்சகர்கள் முன்னிலையில் தோற்றி சித்தியடைந்து சங்கீதரத்தினம் பட்டம் பெற்றவர்.தமிழகம் அடையாறு கர்நாடக இசைக் கல்லூரியில் மூன்று வருடங்கள் இசை பயின்று சங்கீதவித்துவான் என்னும் பட்டத்தினையும் பெற்றவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சிங்கப்பூரிலும் இசைக் கச்சேரிகள் செய்தவர்.சிறுவயது முதல் இறக்கும்வரை அளவையூர் கும்பளாவளைப் பிள்ளையாராலயத்தில் துதிபாடி வந்தமையும், மகோற்சவ காலங்களில் இசைக் கச்சேரிகள் செய்து வந்ததனையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். 2010-01-27 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து இறைவனடி சேர்ந்தார்.