1927.12.14 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை என்னும் இடத்தில் பிறந்து மானிப்பாயில் வாழ்ந்து வந்தவர். நடிகமணி வி.வி. வைரமுத்து மற்றும் பல கலைஞர்களுடன் இணைந்து நடித்துப்புகழ் பெற்றவர். நடிகமணி சாவித்திரியாகவும் உருத்திராபதியவர்கள் சத்தியவானாகவும் இணைந்து நடித்த முதுபெரும் கலைஞராவார். இவர் இராமாயணத்தில் இராமராகவும், அல்லி அருச்சுனாவில் அருச்சுனனாகவும், சத்தியவான் சாவித்திரியில் நாரதராகவும்,வள்ளி திருமணத்தில் வேடன், வேலன், விருத்தன், நாரதர், பூதத்தம்பியில் கைலாயபிள்ளையாகவும், ஞானசௌந்தரியில் லேனாளாகவும், கோவலன் கண்ணகியில் கோவலனாகவும், பவளக் கொடியில் அர்ச்சுனாவாகவும், மார்க்கண்டேயரில் மிருகண்ட முனிவராகவும் மயான காண்டத்தில் சத்தியகீர்த்தி, நாரதர் போன்ற பல பாத்திரங்களிலும் நடித்து ஈழத்து பார்சி அரங்க வரலாற்றில் தனக்கென்றொரு இடத்தினைப் பதித்துக் கொண்டவர். இவருடன் இணைந்து நடித்தவர்களில் நடிகமணி, வி,வி,வைரமுத்து, சி.ரி. செல்வராசா, வி.என்.செல்வராசா, கனகரத்தினம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 1978 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட இவரது வானொலி இசை நாடகங்கள் பிரபல்யம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள கலைஞானகேசரி மற்றும் வலிகாமம் வடக்கு கலாசாரப்பேரவையின் கலைச்சுடர் விருதும் வழங்கப்பெற்றவர். 2008-02-18 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.