கந்தசாமி பேரம்பலம் என்ற இயற்பெயருடைய இவர் 1946-12-18 ஆம் நாள் நெல்லியடியில் பிறந்தவர். ஈழத்து எழுத்தாளர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினம், கவிதை, நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர். கந்தசாமி, பறுபதம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். இவர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பல்தொழில் நுட்ப நிலையம், சட்டக்கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி கற்றார். பேரன் 1960 களின் தொடக்கத்தில் வீரகேசரியில் யாழ்ப்பாண செய்தியாளராகவும், பின்னர் 1966 இல் அஞ்சல் திணைக்களத்தில் எழுத்தாளராகப் பணியாற்றத் தொடங்கினார். குவைத் நாட்டில் சிறிதுகாலம் பணியாற்றியுள்ளார். இவரது சிறுகதைகள் ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் மற்றும் சத்தியங்கள் ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. விமானங்கள் மீண்டும் வரும் என்ற குறுநாவல் இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல்பரிசு பெற்று ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1986 இல் நூலாக வெளிவந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் இலங்கை இராணுவம் ஏவிய எறிகணை ஒன்று பேரனின் வீட்டில் வீழ்ந்ததில் பேரன், மனைவி உமாதேவி, மகன் உமாசங்கர் (14 வயது), மகள் சர்மிளா (7 வயது) ஆகிய நால்வரைக் கொண்ட பேரன் குடும்பம் இவ்வுலகை விட்டு விண்ணுலகம் சென்றமை கவலைக்குரியது.