யாழ்ப்பாணம் லைடன் தீவில் கரம்பனில் வைத்தியநாதன் தம்பதிகளுக்கு 1910.10.18 ஆம் நாள் பிறந்த இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று 58 ஆண்டுகாலம் சட்டத்தரியாகப் பணியாற்றினார். 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பதிவுச் சட்டத்தை எதிர்த்ததால் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தந்தை செல்வநாயகத்துடன் இணைந்து 1947 டிசம்பர் 17 இல் தமிழரசுக் கட்சி உருவாகுவதற்கு தோள் கொடுத்தவர் நவரத்தினம். அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். 1952 பொதுத் தேர்தலில் ஊர்காவற்றுறைத் தொகுதி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1956 இல் தனிச் சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது காலி முகத்திடலில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கான ஆலோசனைத் திட்டத்தைத் தீட்டி வழிநடத்தினார். பண்டா – செல்வா ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய பங்காற்றினார். ஊர்காவற்றுறை தொகுதியில் 1965 தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1967 இல் தமிழரசுக் கட்சி தேசிய அரசில் அங்கம் வகித்தது. அச்சமயம் சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்த மசோதா (டட்லி அரசில்) பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதனைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்ததுடன், அடையாள அட்டை அமுலாக்கச் சட்டத்தையும் தீவிரமாக எதிர்த்தார். அதனால், கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். தேசிய அரசில் தமிழரசுக்கட்சி இணையக் கூடாதெனவும் அமைச்சுப் பதவியை ஏற்கக் கூடாதெனவும் எதிரணியிலிருந்து நிபந்தனையுடன் ஆதரவு வழங்கலாமென வாதிட்டமையே அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படக் காரணமாக அமைந்தது. தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறிய நவரத்தினம் தமிழ் ஈழக் கோரிக்கையின் கருவூலமான தமிழர் சுயாட்சிக் கழகத்தை 1969 ஆகஸ்ட் 27 இல் ஆரம்பித்தார். அவருடன் செனட்டர் மாணிக்கம், சிவானந்தசுந்தரம், சட்டத்தரணிகள் கோடீஸ்வரன், என். ஸ்ரீகாந்தா ஆகியோரும் அவருடன் இணைந்து கொண்டனர். தனித் தமிழ் அரசு அமைக்க இளைஞர்கள் போராட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 1970, 1977 தேர்தல்களில் ஊர்காவற்றுறை தொகுதியில் தமிழரசுக் கட்சியின் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களுக்கெதிராக சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார். இலங்கை பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது (1956), தமிழ்த் தேசியத்தின் எழுச்சி (1995), திருவெம்பாவை (2004), தமிழர் பூர்வீக சரித்திரம் (ஆங்கிலம், 2004) ஆகிய நூல்களை எழுதிய இவர் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் நகரில் டிசம்பர் 22, 2006 வெள்ளிக்கிழமை தமது 97ஆவது வயதில் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.