1931.10.19 ஆம் நாள் யாழ். தீபகற்பம் -புங்குடுதீவு என்னும் இடத்தில் பிறந்து கே.கே. எஸ்.வீதி, மருதனார்மடம் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். நாடகத்துறையில் பட்டப்பின் கற்கைநெறித் தகைமை பெற்றவர். நாடக ஆசிரியர், எழுத்தாளர், நடிகர், நெறியாளர், பேச்சாளர், கவிஞர் எனப் பல்துறை ஆற்றலுடையவர். பல நாடகவியலாளர்களை உருவாக்கியவர். ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஆசிரியராகக் கற்பித்த காலத்தில் பல நாடகங்களை மேடையேற்றித் தேசிய மட்டத்தில் முதலாமிடங்கள் பலமுறை பெற்றவர். கலையரசு சொர்ணலிங்கம் அவர்களுடன் நெருங்கிய உறவினைப் பேணிவந்தவர். இவருடைய காற்றாடி என்ற நாடகம் அகில இலங்கை ரீதியில் முதற்பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் உடல் நலக்குறைவினால் செயற்பாடுகளில் தளர்வு ஏற்பட்டிருந்த போதிலும் தனது மாணவர்களுக்குப் பின்னால் நின்று பல அரங்க அளிக்கைகளை மேற்கொண்டவர்.ஷேக்ஸ்பியரது ஜூலியஸ்சீசர், திருந்திய கணவன், வீடு ஒன்று வாசலிரண்டு, மெய்ப்பொருள்நாயனார், மநுநீதிச்சோழன் போன்ற நாடகங்களைத் தயாரித்து நாடக உலகில் தன்னை நிலைநிறுத்தியவர். 1995.08.06 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.