Saturday, May 4

முருகையன், இராமுப்பிள்ளை

0

1935-04-23 ஆம் நாள் தென்மராட்சியில் – கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் மூத்த புதல்வனாகப் பிறந்தவர் முருகையன். தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்றார். வித்துவான் க. கார்த்திகேசுவிடம் தமிழ் கற்ற முருகையன் உயர்கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கொழும்பு வளாகத்தில் பயின்று 1956 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பட்டதாரியானார். பின்னர் 1961 ஆம் ஆண்டில் இலண்டனில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.1950 முதல் கவிதை எழுதும் முருகையன் ஏராளமான கவிதைகள், சில காவியங்கள், மேடைப் பாநாடகங்கள், வானொலிப் பாநாடகங்களை எழுதியுள்ளார். திறனாய்வுக் கட்டுரைகள், கவிதை மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் ஈடுபட்டுள்ளார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 1956 இல் விஞ்ஞான ஆசிரியர் பணியைத் தொடங்கிய முருகையன், அரசமொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், பாடநூல்வெளியீட்டுத் திணைக்களத்தில் முதன்மைப் பணிப்பாளராகவும், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களில் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். இறுதியாக, 1986 இல் யாழ். பல்கலைக்கழகத்தில் முதுதுணை பதிவாளராகப் பணியாற்றி 1995 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவராயிருந்த இ. முருகையன் அப்பேரவையின் தொடக்க காலத்திலிருந்தே பங்கெடுத்து வந்ததுடன் தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகம் இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார். இலங்கை அரசினால் வழங்கப்படும் அதிஉயர் விருதான சாகித்திய இரத்தினா விருது 2007 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.இவர் தனது நூல்களுக்குப் பதிப்புரிமை கோருவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பதிப்பகத்தாரிடம் தனது எழுத்துக்களை மக்களில் எவரும் எப்படியும் பயன்படுத்தலாம் என்று சொல்லிவரும் வழக்கமுடையவர். ஒருவரம் (கவிதைகள், 1964), நெடும்பகல் (காவியம், 1967), அது – அவர்கள் நீண்ட கவிதை (1986), மாடும் கயிறு அறுக்கும் (1990), நாங்கள் மனிதர் (1992), ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும் (2001, ஆதிபகவன் (1978) , பா நாடக நூல்களாக வந்து சேர்ந்தன, தரிசனம் (1965), கோபுரவாசல்,வெறியாட்டு (1989), மேற்பூச்சு (1995), சங்கடங்கள் (2000), உண்மை (மொழிபெயர்ப்பு, 2002), எழுதிய மேடை நாடகங்கள் கடூழியம், அப்பரும் சுப்பரும் (1971), திறனாய்வு நூல்களாக ஒருசில விதி செய்வோம், இன்றைய உலகில் இலக்கியம், கவிதை நயம் (பேரா. க. கைலாசபதியுடன் இணைந்து), கட்டுரை நூல்களாக இளநலம், மொழிபெயர்ப்பு நுட்பம், திருவெம்பாவையர் (உரைநடைச் சித்திரம்) இவரால் எழுதப்பட்ட நூல்களாக விளங்குகின்றன. 2009-07-27 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!