Tuesday, February 18

நவரத்தினம், கந்தையா (கலைப்புலவர்)

0

1898 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தில் பிறந்த கலைப்புலவர் நவரத்தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்று அக்கல்லூரியிலேயே 1920 முதல் 1958 வரை வர்த்தகத்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1930 ஆம் ஆண்டு ‘கலாநிலையம்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதில் தன்னிடம் இருந்த ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களைக் காட்சிக்கு வைத்திருந்தார். அவ்வப்போது அறிஞர்களின் விரிவுரைகளும் இம்மண்டபத்தில் நடைபெற்று வந்ததுடன். இந்நிறுவனம் ஊடாக சில ஆண்டுகளுக்கு ‘ஞாயிறு’ என்னும் கலை, இலக்கிய இதழையும் வெளியிட்டு வந்தார். கலைப்புலவர் சைவ சித்தாந்தத்தை நன்கு பயின்று ஆராய்ந்தவர். யாழ்ப்பாணம் சிவயோக சுவாமிகளின் அடியாராக இருந்தவர். 1943 இல் கண்டியில் நடைபெற்ற சர்வமதக் கோட்பாடுகளின்மாநாட்டில் சைவ சித்தாந்தம் பற்றி விரிவுரை நிகழ்த்தினார். பதினெண் புராணங்களைப்பற்றி ஆங்கிலத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதினார். நடராச வடிவம். தமிழ்நாட்டிற் கலை வளர்ச்சி, இலங்கையிற் கலை வளர்ச்சி, இந்திய ஓவியங்கள், ஆனந்த குமாரசுவாமி, நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சி. கணேசையர் ஆகியவை அவரது வானொலிச்சொற்பொழிவுகள் ஆகும்.

மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழாவில் ‘தமிழ் நாட்டில் ஓவிய வளர்ச்சி’ என்னும் பொருள் பற்றி விரிவுரையாற்றினார். 1920 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒரு பாடசாலையைச் சுவாமி விபுலாநந்தருடன் இணைந்து ஆரம்பித்து நடத்தினார். 1929, 30, 31ஆம் ஆண்டுகளில் வடமாகாண மதுவிலக்குச்சபை, ஈழகேசரி நா. பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், யாழ்ப்பாணக் கலை கைப்பணிக்கழகம் ஆகியவற் றின் செயலாளராகவும் யாழ்ப்பாண அருங்காட்சியகம், இலங்கைத் தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றின் ஆலோசனைக்குழுவிலும் உறுப்பினராக இருந்தார். ஆலயங்களில் மிருகபலியை நிறுத்தல் வேண்டுமென்றும். தீண்டாமையை ஒழித்தும், மதுவிலக்கை ஆதரித்தும் ஈழகேசரி, வீரகேசரி, இந்துசாதனம், “Hindu Organ”ஆகிய பத்திரிகைகளில் கட்டுரைகளும், அறிக்கைகளும் எழுதினார். 1956 டிசம்பரில் புது தில்லியில் நடைபெற்ற ஆசிய எழுத்தாளர்களின் மாநாட்டில் கலைப்புலவர் கலந்துகொண்டு உரையாற்றினார். க. நவரத்தினம் கலை, கைப்பணித் துறைகளில் ஆற்றிய பணிகளைக் கௌரவித்து, மேலவை, நாடாளுமன்ற உறுப்பினர் சு. நடேசபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இலங்கையிற் கலை வளர்ச்சி என்னும் நூல் அறிமுக விழாவின் போது யாழ்ப்பாண மக்கள் சார்பில் கலைப்புலவர் என்னும் பட்டத்தை நடேசபிள்ளை வழங்கிக் கௌரவித்தார். Advaita Vedanta-An Introductory Study,Saiva Siddhanta,Hindu Temple Reform, வீரசைவம் அல்லது இலிங்காயுதம், சிவானுபூதி செந்நெறி, Bhagavad Gita – An Introductory  Study, Studies in Hinduism  (1963, மீள்பதிப்பு: 2010),யாழ்ப்பாணக் கலையும் கைப்பணியும், தென் இந்திய சிற்பவடிவங்கள்,இலங்கையிற் கலைவளர்ச்சி, இந்திய ஓவியங்கள், Arts and Crafts of Jaffna,Development of Art in Ceylon, Religion and Art, Tamil Element in Ceylon Culture, கணக்குப் பதிவு நூல், உயர்தரக் கணக்குப் பதிவு நூல், இக்கால வாணிப முறை போன்ற பல நூல்களை வெளியிட்டுள்ள இவர் 1962 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!