யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி என்ற ஊரில் வைமன் கு.கதிரவேற்பிள்ளை என்பவருக்கு 1876-06-23 ஆம் நாள் பிறந்தவர். இவர் யாழ்ப்பாணக் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இவர் சட்டக் கல்வியை முடித்து கொழும்பில் வழக்கறிஞராகவும், பின்னர் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார். இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு இரண்டாவது தமிழ் உறுப்பினராக 1914 ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்பட்டார். 1924 ஆம் ஆண்டில் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரானார். இலங்கையில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, சுதேச மருத்துவமனை, அரசு அடைமான வங்கி போன்ற சேவைகள் ஆரம்பிப்பதற்கு இவர் மூல காரணமாக விளங்கினார். மகாவலி ஆற்றுநீரை வேளாண்மைக்கு வசதியாகத் திசை திருப்ப இவர் முன்னோடி யாக இருந்து உழைத்தார். 1984ஆம் ஆண்டு மே 22 இல் இலங்கை அரசு இவரது படம் பொறித்த முத்திரையை வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது. 1952 செப்டம்பர் 4 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.