நிறைகுடம் என்பது யாழ்ப்பாணத்தவர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். மேசை மீது விரிப்பொன்றை விரித்து அதன் மீது ஒரு தலைவாழை இலையை இலையின் நுனிப்பகுதி வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமையுமாறும், இம் முறை அவ்விடத்திற்கு பொருந்தாவிட்டால் பொதுவாக வரவேற்பு நிகழ்வாக இருந்தால் வருபவர்களுக்கு வலப்பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்கக் கூடியதாக வாழை இலையை வைத்து அதன் மேல் நெல் பரப்பி,; நீர் நிரப்பிய பித்தளை கும்ப குடத்தை வைத்து அதன் இரு பக்கங்களிலும் குத்துவிளக்கு ஒவ்வொன்றும், ஐந்து மாவிலைகளை குடத்தின் வாயில் வைத்து, முடித்தேங்காயை அதன் மேல் வைத்து பூரண கும்பம் ஓழுங்கமைக்கப்படும். அமங்கல கிரியைகளுக்கு கும்பம் வைக்கும் போது மாத்திரம் மூன்று மாவிலைகள் வைப்பார்கள். செய்கின்ற காரியங்கள் முழுமையாய் நிறைவுபெறும் எனும் நம்பிக்கையில் நிறைகுடம் வைக்கப்படுகின்றது. சைவத் தமிழ் மக்கள்; தங்கள் கலை, பண்பாட்டு, சமூக நிகழ்வுகளின் போதும் விசேஷ பண்டிகை கொண்டாட்டங்களின் போதும் சுபமங்கல சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைத்து வரவேற்பதும் ஆரத்தி செய்வதும் ஆகம மரபு வழி வந்த வழக்கமாகும்.


