யாழ்ப்பாண மாவட்டத்தின் மரபுசார்ந்த உற்பத்திக் கைத்தொழில் நிலையங்களில் ஒன்றான திக்கம் வடிசாலை, தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் ஒன்றான கற்பகதரு என போற்றப்படும் பனை மரத்திலிருந்து அதியுச்சப் பயனை பொருளாதார ரீதியாக பெற வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் உச்சப்பங்களிப்போடும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பகுதியினரின் செயற்திட்டத்தின் மூலமும் உருவாக்கப்பட்டது.
1983 ஆம் ஆண்டு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலும், பனை, தென்னைவள அபிவிருத்திக்கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டு நிதியிலும் உருவாக்கப்பட்டதாகும். 1984-09-04 ஆம் நாள் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதபரும் மாவட்டச் செயலாளருமாகிய அமரர் தேவநேசன் இராசையா அவர்களது திருக்கரங்களால் வடமராட்சி திக்கம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பனஞ்சாராய வடிசாலையை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கும் மேம்பாட்டிற்கும் கையளிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மிகவும் இலாபத்தோடு இயங்கிவந்த இந்த வடிசாலையானது உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பனை அபிவிருத்திச் சபையிடம் பெறப்பட்ட உதவியோடு வடிசாலை தனது பணிகளை தொடந்த நிலையில், 2001ஆம் ஆண்டு அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் பனை அபிவிருத்திச் சபையின்கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பனை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களில் சுமார் 7,500 உறுப்பினர்கள் கள் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திக்கம் வடிசாலையானது முறையாக இயங்கும்பட்சத்தில், 3 தொடக்கம் 4 மில்லியன் ரூபாய் வருமானம் பெறக்கூடியதாக அமையும். இந்த வருமானமானது திக்கம் வடிசாலைக்கும், அதனை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டியதொன்றாகும். மேலும் 500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உருவாக்கப்படக்கூடிய ஏது நிலைகள் உள்ளன.
யாழ்ப்பாணத்தின் பனைசார் தொழிலாளர்களின் சொத்தாகிய திக்கம் வடிசாலையானது பனை உற்பத்தியாளர் சங்கங்களோடு இணைந்த பொறிமுறையூடாக அபிவிருத்தி செய்து மீள இயங்க வைக்கவேண்டியது அவசியமாகும்.
இத்தொகுப்பினை நிறைவேற்றுவதற்கு உதவிய கரவெட்டி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி காயத்திரி அவர்களுக்கு எமது நன்றி.
.