அச்சுவேலி நாவலம்பதியிலே வாழ்ந்த சீனியர் என்னும் அருளாளர் தமக்குற்ற நோயைத் தீர்க்கும் வண்ணம் ஆயிரத்துத்தொளாயிரத்து இருபத்தெட்டாம் ஆண்டு கதிர்காம யாத்திரையை மேற்கொண்டதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட நோய்க்கு விபூதியே ஒளடதமாக எண்ணி வாழ்ந்தார். நோய் குணமடையாமல் மேலும் மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக கந்தனது கழலினையே தஞ்சமென நைந்துருகினார். ஒரு நாள் முருகன் கனவிலே தோன்றி கதிர்காமத்திலிருந்து கொண்டு வந்த விபூதிப்பிரசாதத்துடன் வேல் இருப்பதனையும் அதனை ஒரு புனிதமான இடத்தினைக் காட்டி அங்கே தன்னை வைத்துப் பூசித்தால் நோய் தீர்ந்து குணமடைவாய் என திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.சீனியர் தாம் கண்ட கனவின் படியே ஆயிரத்துத்தொளாயிரத்து இருபத்தொன்பதாம் வருடம் ஆனித் திங்கள் இருபத்தைந்தாம் நாள் கதிர்காமவழி காட்டுமலைக் கந்தனின் ஆலயத்தினை நிறுவினார்.அன்றிலிருந்து ஆலயம் படிப்படியாக வளர்ந்து இன்றைய நிலையினை எய்தியதெனலாம். ஒவ்வொரு வருடத்திலும் ஆனிமாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் கொடியேற்றத் திருவிழாவுடன் மகோற்சவம் ஆரம்பமாகி 25 தினங்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.