1935.12.18 ஆம் நாள் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய ஒன்பதாவது வயதில் திருக்கணித பஞ்சாங்கக்கணிதர் சி.சுப்பிரமணியஐயர் அவர்களால் யாழ்ப்பாணம் மட்டுவிலுக்கு அழைத்து வரப்பட்டார். இளமைக் கல்வியை யாழ் கல்வயல் ஸ்ரீ சண்முகானந்தா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ் மட்டுவில் மகா வித்தியாலயத்திலும் உயர் நிலைக் கல்வியை யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார். கல்வி கற்கும் காலத்திலேயே பஞ்சாங்கக் கணிதமும் பயின்று வந்தார். 1970-08-19 இல் திருக்கணித பஞ்சாங்கராக விளங்கிய சி.சுப்பிரமணிய ஐயர் சிவபதமடையவே அந்தப்பொறுப்பினை சிதம்பரநாதக்குருக்களவர்கள் ஏற்றுக் கொண்டார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆற்றலுடையவராகத் திகழ்ந்து பல நூல்களை ஆக்கியுள்ளார். திருக்கணித அச்சகத்தினை நிறுவி ஸ்நபன மஞ்சரி என்ற சமஸ்கிருத நூலையும் சோதிடம் கற்போம், திருமணப் பொருத்தம் என்ற தமிழ் நூல்களையும் வெளியிட்டார். தமிழகத்தில் பிரபல்யம் பெற்றிருந்த திருக்கணித பஞ்சாங்கம் இவரது அரிய முயற்சியால் இலங்கை மட்டுமல்லாது, புலம்பெயர் நாடுகளான கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து மலேசியா,சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் நேரக்கணிப்பு களுடன் கணிக்கப்பெற்று வெளிவருவதற்கு காலாயமைந்தவர். 1977 தொடக்கம் 1989 வரை சோதிடமலர் என்ற மாத சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தவர். கிரியைகளின் போது மந்திரங்களை அறுத்து உறுத்துக் கூறும் தன்மையுடையவர். இவரது பணியினை வியந்த மக்கள் வேதாகம சோதிட பூஷணம், சிவாச்சாரியார் திலகம், சிவாகம பூஷணம், வேதாகம வித்தகர் போன்ற பட்டங்களை வழங்கி கௌரவப்படுத்திய அதேவேளை இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட இப் பெரியார் 2015-05-24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.