1916 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். அக்காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த இந்தியக் கலைஞர்களான வீணை வித்துவான் துரைசாமிஐயர், சபேசஐயர் ஆகியவர்களிடம் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், ஆர்மோனியம் ஆகிய பல்லியக் கலைகளைப் பயின்றார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்த பல்வேறு இசைநிகழ்வுகளிலும் வயலின், ஆர்மோனியம், புல்லாங்குழல் ஆகியவற்றின் பக்கவாத்திய அணிசெய் கலைஞராகத் திகழ்ந்ததுடன் தனிஆவர்த்தன நிகழ்வாகவும் வழங்கி இசைமரபினில் தனக்கென்றதான இடத்தினை வகித்துக் கொண்டார். ஏழு தந்திகளைக் கொண்ட வயலினை வாசிக்கும் ஆற்றலுடைய கலைஞர்களான மைசூர் சௌடையா, சேதுராமையா ஆகியோருக்கு ஈடிணையாக ஈழத்தில் ஏழுதந்தி வயலினை வாசிக்கும் ஆற்றல் கொண்ட ஒரேயொரு கலைஞனாக விளங்கினார். இசையாசிரிய ராகப் பணியாற்றிய இவர் முருகன் மீதுகொண்ட அளவறாத பக்தியினால் யோகர் சுவாமிகள், வடிவேல் சுவாமிகள் ஆகியோரிடம் சீடராகி இல்லறத்தில் இருந்து கொண்டே தவ வாழ்க்கை மேற்கொண்டு கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவ ஆச்சிரமத்தில் வடிவேல் சுவாமிகளிடம் சென்று துறவறம் பூண்டு 1990 ஆம் ஆண்டு சமாதி நிலையடைந்தார்.