1944-08-02 ஆம் நாள் யாழ்ப்பாணம்- புத்தூரில் பிறந்து திருநெல்வேலியில் வாழ்ந்தவர். 1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இளம் எழுத்தாளர் சங்கத்தினை முதன் முதலில் ஸ்தாபித்தவர். இச்சங்கத்தில் இணைந்து செயற்பட்ட பல உறுப்பினர்கள் இன்று ஈழத்து இலக்கிய வானில் தனித்துவ ஆளுமையுடையவர்களாகத் திகழ்கின்றனர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுதியாக வெளிவந்த காலத்தின் குரல்கள் தொகுப்பின் ஆசிரியராகவும், பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடான இளங்கதிர் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கியவர். வானொலிக் கலைஞனாக நல்லதோர் எழுத்தாளனாக, நாடகக் கலைஞனாக, ஆய்வாளனாக விளங்கிய காரணத்தினால் கலாபரமேஸ்வரன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1983-07-24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.