1957.11.13 ஆம் நாள் நெல்லியடியில் பிறந்தவர். தனது ஆறாவது வயதிலிருந்து நாதஸ்வரக் கலையை தாய்வழிப் பேரனான நடராசா என்பவரிடம் கற்றவர். சுருதி லய சுத்தமாகவும் பாடலின் சொற்கள் வெளிப்படும் விதமாகவும் இராகங்களிற்கான வரன்முறைகளை நன்கு அநுசரித்தும் வாசிக்கும் இயல்புடைய இவர் சங்கராபரணம், கல்யாணி, காம்போதி, தர்மவதி, லதாங்கி, சாருகேசி போன்ற இராகங்களை வாசிப்பதில் அதிக நாட்டமுடையவர். அத்துடன் மல்லாரி, பல்லவி போன்ற உருப்படிகளை லாவகமாகவும் இனிமையாகவும் கம்பீரமாகவும் இசைக்கும் திறன்கொண்டவர். மைத்துனர் கே.முருகேசுவிடம் இரண்டு ஆண்டுகள் வரன்முறையாகக் கற்று அவரது குழுவில் நாதஸ்வரக் கலைஞனாக விளங்கி வந்தார். இணுவில் கே.ஆர். புண்ணியமூர்த்தி குழுவில் பிரதான நாதஸ்வரக் கலைஞனாகப் பணியாற்றியதுடன் என். கே.பத்மநாதன் ,கே.எம்.பஞ்சாபிகேசன், எம்.பி.பாலகிருஸ்ணன், வீ.கே.கானமூர்த்தி, வீ.கே. பஞ்சமூர்த்தி போன்ற மேதைகளுடன் இணைந்து வாசித்து தனது திறன்களை மேலும் வளப்படுத்திக் கொண்டவர். 1982 ஆம் ஆண்டு தமிழகம் சென்று திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார் கோயில் ,மருதமலை முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் தமிழக வித்துவான்களோடி ணைந்து மங்கல இசைப் பணியாற்றி தனது இசைஞானத்தை மேலும் வளப்படுத்தினார். நாதகங்கை, சுரஞானசுரபி என அன்பாக அழைக்கப்பட்ட இவர் 2013.06.14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
