Tuesday, April 30

சிவத்திரு. வர்ணராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம்.

0

அறிமுகம்

ஒலிப் பிளம்பாய் பீறிட்டுப்பாய்ந்த வர்ணங்களின் நாயகன்.

வலிகாமம் வடக்கு கலைப்பூமி. அதிலும் அளவெட்டி என்றால் சொல்லவும் வேண்டுமா? ஆன்மீகமும், தவில் நாதஸ்வரமும் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக் கும் மருதமும் குறிஞ்சியும் முல்லையுமென புகழ் பரப்பும் இம் மண்ணினை அயல் கிராமமாகக்கொண்ட சிறுவிளான்; என்னும் இடத்தில் இலங்கை இராணுவத்தில் இராணுவ வீரனாக கடமை புரிந்து இசைக்கலை மீதான ஆர்வமேலீட்டினால் இராணுவக் கடமையிலிருந்து நீங்கி இசைக்கலையின் பிறப்பிடமாய் கண்டிப்பும் ஒழுக்கமும் மிகுந்த கலைப்பாரம்பரியக் குடும்பத் தோன்றலாகிய சிவத்திரு. முருகேசு வர்ணகுலசிங்கம் – மகேஸ்வரி தம்பதியினருக்கு தவமாய்க்கிடைத்த தவப் புதல்வன் ராமேஸ்வரன் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05ஆம் திகதி பிறந்தார். ஜெயேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கலைஞானசிங்கம், ஞானேஸ்வரி  ஆகியோரை சகோதரர்களாகக் கொண்டிருந்தார்.

ஈழத்தின் முதுசமாகக் கொண்டாடக்கூடிய இசை மரபின்; பரம்பரை என்பது படிப்படியாக விடைபெற்றுக்கொண்டிருப்பது மிகப்பெரிய வேதனையை அளித்து நிற்கின்றது. 2021-09-25; அன்று ஊர் கூடமுடியாத இடர்க்காலத்தில் மரணமானார் என்ற செய்தி ஈழத்தின் இசை உலகத்திற்கு ஒரு அதிர்ச்சியான செய்தியாகும். நீண்ட கால அனுபவங்களுடன், தாயகக்கனவோடு பயணித்த  இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. தன்னுடைய அனுபவங்களை மற்றவருக்கு கொடுக்க வேண்டும் என்ற பேரவாவுடன் செயற்பட்ட இவர் இளையவர்கள் பலரை இசை மரபில் உள்ளீர்த்து மரபின் நீட்சிக்கு வழிகோலியதுடன், நாடுகடந்து புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்தவர்களுக்கும் பலவகையில் ஊக்கமாக செயற்பட்டார். இசைமரபினை ஆவணமாக்கும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்ட இவரது இழப்பு என்பது ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

சிவத்திரு. வர்ண ராமேஸ்வரன் மிகப் பெரும் இசை ஆளுமை. இவர் உயிரில் இசை கலந்திருந்தது. அதேபோல் தாயக மண்ணை நேசிக்கும் உணர்வும் இவர் இரத்தத்தில் கலந்திருந்தது. இவர் தேசப்பற்றுப் பாடல்கள் பல பாடியிருக்கிறார். எனினும் மாவீரர் துயிலும் இல்லப் பாடல்களே தமிழ் மக்களிடம் இவருக்கான மதிப்பான முகவரியைத் ஏற்படுத்தியது. மாபெரும் இசையாளுமையாகிய வர்ணராமேஸ்வரன்; தமிழ் மக்களின் கலைஞன். மாவீரர் துயிலும் இல்லப் பாடல் ஒன்றே இக்கலைஞனின் உயிர்ப்பையும் தாயகநேசத்தையும் பறைசாற்றி நிற்கின்றது.

“எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்”  என்ற பாடல் வரிகள் ராமின் மதுரமான குரலில் கேட்டோம். அவரையும் நாம் இன்று தேடுகின்றோம்.

எண்பதுகளில் போராட்டக் களத்தில் எல்.வைத்தியநாதன், தேவேந்திரன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் மற்றும் தமிழகக் கலைஞர்களோடும் இணைந்து இலேசாக அரும்பிய எழுச்சிப்பாடல்கள் தொண்ணூறுகளில் பெரும் எழுச்சியோடு வெளிவரத் தொடங்கின. நம் கவிஞர்கள், நம் பாடகர்கள், நம் இசையமைப்பாளர்கள் என்று முற்று முழுதான ஈழத்துப் பரிமாணத்தோடு வெளிவரத்தொடங்கின. அப்போது தோன்றிய ஈழத்துப் பாடகர்களில் ஒருவர் தான் ‘ஈழத்து இசைவாரிதி’ வர்ண. ராமேஸ்வரன் அவர்கள்.

தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலையிலும்;, உயர் கல்வியை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். வர்ண ராமேஸ்வரன் அவர்கள் வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்படும் பரீட்சைகளில் வாய்ப்பாட்டிலும், மிருதங்கத்திலும் ஆசிரியர் தரம்வரை பயின்று சங்கீத மிருதங்க கலாவித்தகர் எனும் பட்டத்தைப் பெற்றார். மேலும் இந்தியாவில் மிருதங்க வித்துவான் திரு.பக்தவத்சலம் அவர்களிடம் மிருதங்கத்தையும்; திரு.ரீ.என்.கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் பாட்டையும் கற்றுத் தேர்ந்தார். அத்துடன் இணுவில் சிவஸ்ரீ தா.மகாதேவக் குருக்களின் குருகுலத்தில் சேர்;ந்து சமஸ்கிருத மொழியையும் கற்றுத் தேர்ந்தார். சிவத்திரு .வர்ணராமேஸ்வரன் அவர்கள் மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜன் அவர்களிடம்; முறைப்படி மிருதங்கம் பயின்றார். 1989ஆம் ஆண்டில் நல்லை ஆதீனத்தில் மிகப் பெரும் இசை வித்துவான்களின் ஆசியுடன் இவரது மிருதங்க அரங்கேற்றத்தைச் சிறப்புடன் நடத்தி இவர் பெற்றோர் பெருமை கொண்டார்கள். யாழ்.பல்கலைக் கழகத்தில் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வாய்ப்பாட்டில் 4 ஆண்டுகள் பயின்று இசைக் கலைமணி என்ற பட்டம் பெற்றதோடு; அங்கே இசை விரிவுரையாளராக 4 ஆண்டுகளுக்கு மேலாகக் கடமையாற்றியிருக்கிறார்.

1999ஆம் ஆண்டு ஆனி மாதம் முப்பதாம் திகதி திருமணம் என்னும் நல்லறத்தில் ராம் இணைந்து கொண்டார். யாழ்ப்பாணம் நயினாதீவினைச் சேர்ந்த முன்னாள் இலங்கை கணக்காய்வு அதிகாரியாகப் பணியாற்றிய திரு.நாகலிங்கம் சதானந்தன் – மகேஸ்வரி தம்பதியரின் புத்திரியும், பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தில் பயின்றவருமான சபர்மதி அவர்களை தன் வாழ்க்கைத் துணையாக கரம் பற்றினார். சபர்மதி அவர்கள் வீணையிலும் பரதநாட்டியத்திலும் தேர்ச்சி பெற்றவர். இவ் இல்லறத்தின் பயனாக இரண்டு பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களை கல்வியுலகில் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில்  ஒரு தந்தையின் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார். தமிழின் மீதுள்ள பற்றினால் தனது புதல்வனுக்கு இளங்குமரன் என்றும் புதல்விக்கு கண்மணி காயத்திரி என்றும் தூய தமிழில் பெயர் சூட்டி மகிழ்ந்தார். இவரது பிள்ளைகள் கனேடிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகின்றார்கள். இவற்றிற்கு மேலாக இரு பிள்ளைகளும் இசைத்துறையில் தந்தையின் பெயரை நிலைநாட்டி வருவதுடன் மிருதங்கம், வீணை, Keyboard என்னும் இசைக்கருவிகளை தமது தந்தையாரிடமே கற்று அதனிலும் மிளிர்கின்றார்கள். பிள்ளைகளுக்கு தனது கலைத்துறையைக் கற்பித்து கலைத்தொடர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கும் வர்ணராமேஸ்வரன் அவர்களது கலைத்தெடர்ச்சி உலகம் பூராவும் அவரது மாணவர்கள் மூலமாகவும் பிள்ளைகள் மூலமாகவும் என்றும் நிலைத்து நிற்கும். இவர்கள் ஊடாக வர்ணராமேஸ்வரன் எம்மோடு என்றும் வாழ்ந்து கொண்டிருப் பார். தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்ற இவருடைய சகோதரி ஜெயேஸ்வரி கைலாயநாதன் கர்நாடக சங்கீதம் உட்பட பல பாடல்களை இசைப்பதில் வல்வராகவும் திகழ்ந்து வருகின்றார்.

இசையுலகில் வர்ணராமேஸ்வரன்

சிவத்திரு. மு.வர்ணகுலசிங்கம் அவர்களே திரு வர்ண ராமேஸ்வரனின் குருவும் ஆவார். தந்தை வழி தனயனும் பல நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி மெட்டமைத்து பல மேடை இசைக் கச்சேரிகளில் பாடியுள்ளார்;கள்.

சிவத்திரு.ராமேஸ்வரனின் தந்தை வழி தாய்வழிப் பேரனார்கள் இசை நாடக பண்ணிசைக் கலைஞர்கள். இச்சூழலில் வளர்ந்ததனால் 10,12 வயதிலேயே இசை நிகழ்வுகளுக்காக மேடையேறத் தொடங்கினார். தனது 18ஆவது வயதில் மேடை இசைக் கச்சேரிகள் செய்தும்; பிரபல இசைக் கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்தும்; நடன அரங்கேற்றங்களுக்குப் பாடியும் தனது திறமையை வெளிப்படுத்தினார். அத்துடன் நாட்டிய நாடகங்களுக்கு இசையமைத்துப் பாடவும் தொடங்கினார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும்; தொலைக்காட்சியிலும் வாய்ப்பாட்டு, பண்ணிசை மெல்லிசை, மிருதங்கம் என்பவற்றில் தேர்வு செய்யப் பட்ட இசைக் கலைஞராகவும் விசேட நிகழ்ச்சிகளுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் இவர் ஹார்மோனியம், கீபோர்ட்;, பியானோ, வயலின், வீணை, உடுக்கு, தபேலா மற்றும்  கெஞ்சிரா போன்ற சகல இசைக் கருவிகளையும் திறம்பட வாசிக்கும் திறனுடையவர். சுருதி விலகாமல் பாடவேண்டுமென்பதைத் தமது மாணவர்களுக்கு வலியுறுத்துவார். “கலைஞன் காலத்தின் கண்ணாடி” என்பது சிவத்திரு.வர்ண ராமேஸ்வரனுக்கு சாலப்பொருந்தும். தமிழ் மொழியிலும் தாயகத்திலும் மிக ஈடுபாடுகொண்டவர். வர்ண ராமேஸ்வரன் தமிழ்மீது கொண்ட பற்றால் பல பாடல்களைத்தானே எழுதியும் இசைக் கச்சேரிகளில் பாடியும் இருக்கிறார். பல நடன அரங்கேற்றங்களுக்கு தான் இயற்றித் தயாரித்த கீர்த்தனைகள், பதங்கள், வர்ணங்கள், தில்லானாக்கள் எனப் பாடி சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார்.

பல நடன ஆசிரியர்கள் இவரிடம் பல புதிய உருப்படிகளை எழுதி, இசையமைத்துத் தரும்படி கேட்டு தமது அரங்கேற்றங்களைச் சிறப்பாக நடத்தியுள்ளனர்.

நடன அரங்கேற்றங்களில் இவர் பாடும் விதமே தனிச் சிறப்பு. இவரின் குரலில் பாடல்களின் அர்த்தங்களும் நளினங்களும் மிக இலாவகமாக வெளிப்படும். இவருடைய அசாதாரண பாடல் திறனை ரசித்து ராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் என்பவரை “வர்ண ராமேஸ்வரன்” எனப் பெயர் சூட்டி ‘உலகப்புகழ் பெறுவாய்’ என வாழ்த்தி மகிழ்ந்தார் அளவையூர் அருட்கவி சி.விநாசித்தம்பிப் புலவர் அவர்கள்!

ஈழத்தின் கலைப் பொக்கிஷமான வீரமணி ஐயா, அளவையூர் அருட்கவி சி.விநாசித்தம்பிப் புலவர்,  கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் சேரன், கலைவாணி இராஜகுமாரன், போன்றோரின் பல கீர்த்தனைகளுக்கும்; மெல்லிசைப் பாடல்களுக்கும் இசையமைத்துப்பாடி இறுவட்டுகளாகவும் வெளியிட்டிருக்கிறார்.

கர்நாடக சங்கீதத்தில் உள்ள இராகங்கள் அனைத்தும் இவர் நா நுனியில் இருக்கும். தெலுங்குக் கீர்த்தனைகளையும் மிக அழகாகப் பாட வல்லவர். எனினும் தமிழோடு இசை பாடவேண்டுமென்பதே இந்த ஈழக் கலைஞனின் பிரதான நோக்கம். தாய்மொழியில் பாடுவது அந்த இரசிகர்களுக்கு இசை இரசனையைக் கூட்டும் என திரு.வர்ண ராமேஸ்வரன் அடிக்கடி கூறுவார். தாயக, தமிழிசைப் பாடல்களாலேயே உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் நெஞ்சங்களில் குடிகொண்டுள்ளார். இவரது சிறந்த இறுவட்டுகள் பல உள்ளன. 90களில் ஈழத்து ஜேசுதாஸ் என இவரது ரசிகர்கள் இவரை அழைத்தனர். ‘நல்லைமுருகன் பாடல்கள்’ 1994ஆம் ஆண்டு கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுத வர்ண ராமேஸ்வரனின் குரலிலும் மெட்டமைப்பிலும்; இசைவாணர் கண்ணன் அவர்களின் இசையமைப்பிலும் வெளிவந்தது. அக்காலத்தில் லண்டன் பிபிசி (BBC) யின் தமிழோசை இவரது நல்லைமுருகன் பாடல்களை தொடர்ந்து ஒலிபரப்பியமை சிறப்பாகப் பேசப் பட்டது. ‘திசை எங்கும் இசைவெள்ளம்’ என்ற இறுவட்டு கவிஞர் புதுவை இரத்தின துரை அவர்களால் எழுதப்பட்டு, வர்ண ராமேஸ்வரனின் இசையமைப்பிலும் குரலிலும் 1999ஆம் ஆண்டளவில் வெளிவந்து பலரதும் பாராட்டைப் பெற்றது.

தாயகத்தில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் இசை, நடன ஆசிரியர்களுக்குப் பல பாகங்களிலும் நடத்தப்பட்ட ஆசிரியர் பட்டறைகளைத் தலைமை தாங்கி நடத்தி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளையும் வழங்கியிருக் கிறார்.

புலம்பெயர் தமிழர்கள் வர்ண ராமேஸ்வரன் அவர்களிடம் இசை கற்பதற்கு ஆர்வமாகத் தொடர்பு கொள்வார்கள். எனவே இணைய வழி கற்கை நெறியை தமிழர்கள் மத்தியில் முதன் முதலாக அறிமுகமாக்கிய பெருமை இவரையே சாரும். இது தொற்றுநோய் பேரிடர் காலத்துக்கு முன்பே அறிமுகமாக்கப்பட்டது. கனடாவில் தமிழரிடையே இணையவழி கலைக் கல்வியை முதலில் தோற்றுவித்த வர் இவரே. உலகெங்கும் இருந்து கற்ற மாணவர்களிடம் பெறும் பணத்தை தாயகத்தில் போரினால் பாதிப்படைந்த மக்களுக்கு வழங்கி வந்தார். இவர் மண்மேல் வைத்த பற்றின் காரணமாக தாயக மாணவர்களை அவரவர் திறமை களுக்கு ஏற்ப அவர்களை முன்னேற்ற வேண்டுமெனக் கொண்டு; வர்ணம் கிரியேஷன் (Varnam Creation) என்னும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தன்னால் முடிந்த உதவிகளை தமிழ்ச் சமுகத்திற்கு ஆற்றினார்.

தனது இளமைக் காலத்திலிருந்தே ராமேஸ்வரன் அவர்கள் ஒரு கைவினைக் கலைஞரும் கூட. வானொலி, தொலைக்காட்சிப்பெட்டி, மோட்டார் சைக்கிள் போன்ற பல இயந்திரங்கள் பற்றித் தானாகவே கற்று, தன் ஆர்வத்தோடு திருத்தும் பணிகளைச் செய்வார். வளர்ந்து வரும் கணினித் தொழில்நுட்பங்களைத் தேடிப் படிப்பார். கணினி வகுப்புகளுக்குச் சென்று கற்றதில்லை. ஆனால்; கணினி மென்பொருள்;, வன்தட்டுகள் பழுதடைந்தால் திருத்தும் பணிவரை மிகத் திறம்படச் செய்வார்.

Sangeetha Recording Studio என்னும் ஒலிப்பதிவுக் கூடத்தை நிறுவி, தானாகவே பல ஒலிப்பதிவுகளை மேற்கொண்டார். புலம்பெயர்ந்த சூழலில் ஈழத்தமிழர் கள் பல நாடுகளில் வாழ்வதால்; வர்ணராமேஸ்வரன் அவர்கள் தாய் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் வருங்கால சமுதாயம் பின்பற்ற வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாக இருந்தார். தனது கற்பித்தலிலும் அதனை வெளிப்படுத்தினார். தமிழையும் இசையையும் ரசித்து மாணவர் களுக்கு ஊட்டினார். தனது வகுப்பிற்கு வரும் மாணவிகள் நெற்றியில் பொட்டு டன் வரவேண்டுமென்பதில் கண்டிப்பாக இருந்தார். அவர்களும் அதனை அக்கறையாகப் பின்பற்றினார்கள். தமிழ் மொழியிலான சிறந்த பாடல் களைக் கற்றுக்கொடுத்தார். கனடாவில் வர்ணம் இசைக் கல்லூரியை நிறுவி உலகெங்கும் பரந்திருக்கும் ஈழத் தமிழ் மாணவர்களுக்கு தனது பரந்த இசையறிவை ஊட்டினார். அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, சுவிஸ், நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடாவின் பல மாநிலங்களில் என தனது இசை நிகழ்ச்சிகளைச் செய்து பலரதும் பாராட்டுக்களைப் பெற்றவர்.

தமிழ் மக்கள் இவர்மேல் வைத்திருந்த பேரன்பினால் ‘தேசப்பற்றாளன்’, ‘மக்களின் கலைஞன்’, ‘தேசியப்பாடகர்’ ‘ஈழத்து இசை வாரிதி’ எனப் பல விருதுகளையும் கௌரவங்களையும் வழங்கி மதிப்பளித்து ஏற்றிப்போற்றி இக்கலைஞனைத் தம் நெஞ்சில் சுமந்து வாழ்கின்றார்கள் என்றால் மிகையில்லை.       

உலகெங்கும் சுழன்றடித்த கொரோனா என்னும் சூறைக் காற்று எமது அருமைக் கலைஞனையும் இசையின் கவர்ச்சியால் பற்றிக்கொண்டது. பல அற்புதமான கலைஞர்களை இழந்தோம். இந்தியாவில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (2020-09-25) அவர்களையும், அவர் மறைந்த ஒரு ஆண்டில், அதே திகதியில் ஈழத்தின் இசைவாரிதி வர்ணராமேஸ்வரன் அவர்களையும் இழந்தோம். எஸ்பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துமுகமாக வர்ணராமேஸ்வரன் அவர்கள் பாட்டெழுதி, இசையமைத்துப் பாடி வெளியிட்டு இருந்தார். தாயகம் வந்து தன்வாழிடம் சென்ற வேளை ஈழத்து இசைக்குயில் கொரோனா என்னும் பெருந்தொற்றுக்குள்ளாகி 2021-09-25ஆம் நாள் இசையுலகை விட்டு நிலையுலகம் சென்றார்.

2021ல் நவம்பர் வெளியான தாய்வீடு பத்திரிகையில் இருந்தும், மேற்படி கட்டுரையினை வர்ணராமேஸ்வரனுடைய வாழ்க்கைத் துணைவி யாராலும் யாழ்ப்பாணப் பெட்டகத்தினராலும் தொகுக் கப்பட்டதாகும். இத்தொகுப் பிற்காக எம்மையும் வர்ணராமேஸ்வ ரனது குடும்பத்தினரையும் தொடர்புபடுத்தி, இத்தொகுப்பினை பூரணமாக்குவதற்கு துணைநின்ற யாழ்ப்;பாணம் இராமநாதன் நுண்கலைப்பீட இசைத் துறை விரிவுரையாளர் திருமதி சுகன்யா அரவிந்தன் அவர்களுக்கும் எமது மனமார்ந்தநன்றி.

கானா பிரபா அவர்களினால் வர்ணராமேஸ்வரன் அவர்களுடைய கலைப்பணி தொடர்பி;ல் செய்யப்பட்ட நேர்கானலின் பகுதி ராமின் தாயக நேசத்தினை எடுத்துக்காட்டும் சாட்சியாக இருப்பதானால் இங்கு அதனை இணைத்துள்ளோம். ஈழக்குயில் கானா பிரபா அவர்களுக்கும் நன்றி.

ஈழக் குயில்  கானா  பிரபா

(நிர்க்கதியான நிலையில் ஆண்டவனைக் கதியென்று பற்றித் தேவார திருவாசகங்களை முணுமுணுத் துக் கொண்டிருப்போமே, அப்படியானதொரு வேளையில் எம்மக்களுக்கான ஊட்டமாக எழுந்தவை ஈழத்து எழுச்சிப் பாடல்கள். எண்பதுகளில் போராட்டக் களத்தில் எல்.வைத்தியநாதன், தேவேந்திரன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் மற்றும் தமிழகக் கலைஞர்களோடும் இணைந்து இலேசாக அரும்பிய இந்த எழுச்சிப் பாடல்கள் தொண்ணூறுகளில் பெரும் எழுச்சியோடு வெளிவரத் தொடங்கின. நம் கவிஞர்கள், நம் பாடகர்கள், நம் இசையமைப்பாளர்கள் என்று முற்று முழுதான ஈழத்துப் பரிமாணத்தோடு வெளிவரத்தொடங்கின.

அப்போது தோன்றிய ஈழத்துப் பாடகர்களில் ஒருவர் தான்,ஈழத்து இசைவாரிதி வர்ணராமேஸ்வரன் அவர்கள். தொண்ணூறுகளில் இளையோ ராக இருந்த எம்மை ஈர்த்த வர்ண. ராமேஸ்வரன் அவர்களை, ஈழத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளை ஒலிஆவணப்படுத்தும் முயற்சி வாயிலாக மார்ச் 2008ல் சந்தித்தேன். இது அதன் எழுத்து வடிவம்.)

கேள்வி: ஈழத்திலே பிறந்து வளர்ந்து, இன்று ஈழத்தமிழகம் பெயர் சொல்லக்கூடிய ஒரு கலைஞனாக விளங்குகிறீர்கள். இசையுலகிற்குநீங்கள் வந்தது எப்படி?

பதில்: ஈழத்தமிழர்களின் கலை வரலாற்றி;ல் முக்கிய இடமாகக் கருதப்படுகின்ற அளவெட்டி என்ற கிராமத்தில் தான் நான் பிறந்தேன்.இந்த இடத்தில்தான் ஈழத்தின் பிரபல நாகசுர, தவில் வித்துவான்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், பாரம்பரிய கூத்து, கரகம்,காவடி, இசை நாடகக் கலைஞர்கள் என அனைத்துக் கலைகளையும் வாழவைத்தவர்கள் மண்ணில் நானும் பிறந்தேன் என்பதுஎனக்குப் பெருமை தருவது.

கேள்வி: நீங்கள் ஒரு இசைக்கலைஞராக வரவேண்டும் என்ற சிந்தனை எப்படித் தோன்றியது? உங்களுடைய சூழ்நிலை ஒரு காரணியாக இருந்திருக்கும். அதே போல நீங்கள் இந்தத் துறையில் தான் உங்களை வளப்படுத்த வேண்டும் என்று யார் உங்களுக்கு முன் னோடியாக இருந்தார்கள்?

பதில்: உண்மையில் என்னுடைய தந்தையார் கலாபூஷணம், சங்கீத ரத்தினம் மு.வர்ணகுலசிங்கம் அவர்கள் ஒரு சிறந்த இசைப் பாரம்பரியத்திலே தோன்றியவர். அதே போல எனது தந்தையார் வழிப் பேரனார் மற்றும் தாயார் வழிப் பேரனார்கூட இசை நாடகக் கலைஞர்கள். எனவே அவர்கள் எங்கள் வீட்டிலேயே இருந்து நிறையப் பாடிக் கொண்டிருப்பார்கள். மற்ற வாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருப்பார்கள். எங்களுடைய வீட்டிலே வகுப்புக்கள் நடைபெறும். அப்படியெல்லாம் இருந்தது எங்கள் வீட்டுச் சூழ்நிலையும் எங்களுடைய ஊரும். ஊரிலே பார்த்தால் எப்பொழுதுமே நாகசுரம், தவில் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். அப்படியான சூழ்நிலையிலேயே வாழ்ந்ததனால், நான் அறியாமலேயே எனக்குள்ளே இசை புகுந்து கொண்டதாகவே நான் நினைக்கிறேன்.

அதன் வெளிப்பாடாக ஆரம்பத்திலே பண்ணிசை மூலமே நான் இசையில் புகுந்து கொண்டேன். பின்னர் பாடசாலையில் இடம் பெற்ற போட்டிகள். எங்களுடைய பாடசாலையான அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி யைக் கற்று அதன் பின்பு மகாஜனாக் கல்லூரியிலே எனது மேற் படிப்பை மேற்கொண்டேன். அப்போது எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் சிறந்த இசை நுட்பங்களை அறிந்த ஆசிரியர்களாக வந்து வாய்த்தார்கள். அதனையும் ஒரு சிறந்த விடயமாகக் கூற வேண்டும். வீட்டில் எனது தந்தையாரும் ஒவ்வொரு விடயத்தையும் நுணுகி நுணுகி ஆராய்ந்துதான் கற்பிப்பார். அப்போது அவருடைய பயிற்சியோடு, பாடசாலையில் நான் கற்ற பயிற்சியும் கூட எனக்கு ஒரு நல்ல அத்திவாரத்தை இட்டதென்றே சொல்ல வேண்டும். அதே வேளை இப்போது என்னை எல்லோருக்கும் தெரியும் ஒரு பாடகனாக. எங்கள் ஊரில் அப்போது வர்ண. ராமேஸ்வரன் இப்படிப் பாட்டுப் பாடுவார் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ஏனென்றால் எனது ஆரம்பம், மிருதங்கம் வாசிப்பது மற்றும் கீபோர்ட், ஆர்மோனியம் வாசிப்பது என்று தான் தொடங்கியது. அதன் பின்புதான் நான் பாடுவதற்காக வந்தேன்.

கேள்வி: பின்னர் முறையாக எப்போது நீங்கள் சங்கீதத்தைப் பயின்று கொண்டீர்கள்? உங்கள் மேற்படிப்பு எல்லாம் எப்படி அமைந்தது?

பதில்: உண்மையிலேயே எனது தந்தையாரிடமே என்னுடைய பயிற்சியை மேற்கொண்டு வந்தேன். என்னுடைய தாயார், சகோதரி ஆகியோர் கூடப் பாடுவார்கள். அப்படி அவர்களிடமேயே அந்தப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு யாழ் பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைப் பிரிவில் நான் மாணவனாக இணைந்து கொண்டேன். அதன் வாயிலாக நான்கு ஆண்டுகள் இசைக்கலைமணி என்னும் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு அங்கேயே தொடர்ந்து நாலைந்து ஆண்டுகளாக இசை விரிவுரையாளராகவும் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கேள்வி: உங்களின் இசைக்கல்லூரிப் படிப்பு, மற்றும் விரிவுரையாளராக இருந்த காலப்பகுதி எது?

பதில்: 1987ம் ஆண்டு காலத்தில் தான் நான் பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவிலே இணைந்து கொண்டேன். இந்திய இராணுவம் வந்த காலப்பகுதி அது. அந்த யுத்த காலப்பகுதியில் எனது படிப்புக்களில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பின்பு 91ம் ஆண்டிலிருந்து 95ம் ஆண்டு இடப்பெயர்வு வரை நான் பல்கலைக்கழகத்திலே விரிவுரையாளராகக் கடமையாற்றியிருந்தேன். அதன் பின்பு இடம் பெயர்ந்து எங்களுடைய நிலம்சிதறடிக்கப்பட்ட பின் நான் புலம் பெயர்ந்தேன்.

கேள்வி: நீங்கள் ஈழத்திலே இருந்த காலப்பகுதியிலே எம் வயதையொத்த இளையோருக்கு அந்தப் போராட்ட காலப்பகுதியிலே பெரும் பாடகர்களாக எம் முன் இருந்தவர்கள். உங்களுடைய பாடல்களைக் கேட்பதென்பதே அப்போது எமது வாழ்வின் கடமையாக இருந்தது. அந்தக் காலப்பகுதியிலே நீங்கள் எந்தெந்த வாய்ப்புக்கள் மூலம் உங்களை இனங்காட்டிக் கொண்டீர்கள்?

பதில் : நடனத்திற்குப் பாடுவதில் நான் பயிற்சி பெற்று விளங்கினேன். காரணம் மிருதங்கம் வாசிப்பதிலும் எனக்குப் பயிற்சி இருந்த படியால் நடனத்திற்குப் பாடுவது என்பது எனக்குச் சுலபமாக அமைந்தது. அந்த வகையில் நான் நடனம், நாட்டிய நாட கங்களுக்குப் பாடுவதில் சிறந்து விளங்கினேன்.

அத்தோடு மெல்லிசைப் பாடல்கள் பாடுவது, இசையமைப்பது போன்ற வற்றிலும் எனக்கு ஈடுபாடு மிகவும் இருந்ததனால் என்னுடைய பாடல்கள் வித்தியாசமாக இருக்கும். அதே வேளை நான் என் மண்ணையும் நேசித்து வந்ததனால் எங்களுடைய சமகால நிகழ்வுகளை ஒட்டியதாக வும்,தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்ததாலும் எல்லோராலும் விரும்பி ரசிக்கப்பட்டது என்று சொல்லலாம். அதே வேளை நாம் கல்வி கற்ற சூழலையும் இப்போது எனக்கு ஞாபகப்படுத்தி விட்டீர்கள். நாம் படித்தது ஒரு இக்கட்டான காலகட்டத்தில். அப்போது எமக்கு மின்சாரம் இல்லை, பற்றறி கூட வாங்க முடியாது. சைக்கிளைக் கவிழ்த்து அதில் உள்ள டைனமோவைச் சுற்றித் தான் பாட்டுக் கேட்டுப் படித்து வந்தோம். ஆனால் இப்போது நான் அதை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது. எங்களுக்கு முன்பு படித்தவர்கள் எல்லாம் வசதியான சூழ்நிலையில் இந்தியாவுக்குச் சென்று படித்து வந்திருக்கின்றார்கள். அது போல் இப்போது உள்ளவர்களுக்கும் இந்தியா சென்று படிக்கும் வாய்ப்பு எட்டியிருக்கின்றது. எங்களுடைய இடைப்பட்ட காலப்பகுதியில் என்னோடு படித்த கோபிதாஸ், கண்ணதாசன், துரைராஜா போன்ற பலர் இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் தான் கற்று வந்தோம். அதெல்லாம் எனக்கு ஒரு பெருமையாக இருக்கின்றது. காரணம் எங்கட மண்ணில் இருந்து, வசதியற்ற சூழ்நிலையிலே எங்கள் மண்ணில் இருந்து கொண்டே எங்களை உலகத்துக் காட்டக் கூடியதாக இருந்தது சாதனை என்று தான் கூறவேண்டும்.

கேள்வி: நிச்சயமாக! அதாவது இருக்கக்கூடிய அந்த வளங்களையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி தன்னை அடையாளப்படுத்தக் கூடிய ஒரு கலைஞனாக உயரலாம் என்பதற்கு உங்களைப் போன்றவர்கள் ஓர் உதாரணம். 80 களில் ஆரம்பித்த தாயக எழுச்சிப் பாடல்கள், தொண்ணூறு களின் ஆரம்பத்தில் அவற்றின் எழுச்சியும், வேகமும் மிக மிக அதிகமாக இருந்தது. அன்றைய காலகட்டத்துப் பாடகர்களிலே முன்னணிப் பாடகராக நீங்கள் தடம் பதித்திருக்கின்றீர்கள். நமது தாயகத்தின் எழுத்து வன்மை கொண்ட புகழ் பூத்த கவிஞர்கள் பலரது தொடர்பும் அப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. குறிப்பாக காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, நா. வீரமணி ஐயர் போன்ற பல கவிஞர்களின் பாடல்களுக்கு உயிர்கொடுத்த ஒரு பெருமையும் உங்களைச் சாரும். இப்படியான கவிஞர்களோடு பழகிய அந்த நாட்களை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்க முடியுமா?

பதில்: நிச்சயமாக. வீரமணி ஐயா அவர்கள், எனது தந்தையாருடைய நண்பர். சிறுவயதில் இருந்தே என்னை நன்றாகத் தெரியும். எங்கு சென்றாலும் கண்ணா என்று அழைத்து என்னை உற்சாகப்படுத்தி வந்த ஆசான்களில் அவரும் ஒருவர் என்றே சொல்வேன். பாடல்களை இயற்றி விட்டு எடே! இஞ்சை வாடா வாடா என்று அழைத்துச் சொல்லித் தருவார். நல்ல ஒரு கற்பனை வளம் வாய்ந்தவர். அவர் பாடல்கள் எழுதும் தன்மை வித்தியாசமானது. அவருடைய பாடல்கள் பலவற்றை நான் பாடியிருக்கின்றேன். அதேபோல் எங்களுக்குத் தேவையானவற்றைக் கூட ஐயா! இப்படியொரு பாட்டு தேவை என்று கேட்டால்எடே! உனக்கென்ன ராகத்திலே வேணும் என்று கேட்பார். அப்போது நாங்கள் ராகத்தை சொன்னால் உடனே பாடலை எழுதுவார். அதற்கு சில சில உதாரணங்களைச் சொல்லலாம். ஒரு முறை நான் போய்க் கேட்டேன். ஐயா! எனக்கு ரேவதி ராகத்தில பாட்டு வேண்டும் என்று.சரி ரேவதி ராகத்தை உடனே ஹம் பண்ணடா என்றார். நானும் உடனே ரேவதி ராகத்தின் ஆரோகண அவரோகணத்தை ஹம் பண்ண ஆரம்பித்தேன். நான் ஹம் பண்ணிக் கொண்டிருக்க அவர் பேனை எழுதிக் கொண்டேயிருக்கின்றது.

எப்படி எழுதினார் என்றால்,அவரே வதியும் நல்லை அழகுத்தலம் செல்வாய் இந்தக் கற்பனையைப் பாருங்கள். ரேவதி என்ற ராகத்தின் பெயரை அந்த வார்த்தைகளுக்குள் அவ ரேவதியும் நல்லை அழகுத் தலம் செல்வாய் என்று அடக்கி விட்டார். அப்படியாக அவர் பாடல்களை எழுதுகின்ற விதம் சற்று வித்தியாசமானது.

ஒருமுறை நான் அவரிடம் சென்ற போது எடேய் எடேய் இஞ்ச வா என்று கூட்டிக் கொண்டு போனார். பார்த்தால் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் வீதியிலே நாலைந்து சிறு வர்கள் சைக்கிளைக் கவிழ்த்து வைத்து டைனமோவை சுற்றி பாட்டுப் போகுது. இவர்களும் ஆட்டம் போடுகின்றார்கள். கேளடா அதை என்று அவர் சொல்ல அப்புஹாமி பெற்றெடுத்த லொக்கு பண்டாமல்லி என்ற உன்ர பாட்டுத் தான்ரா போகுது என்று சொல்லி மகிழ்கின்றார். உண்மையில் அவர் எல்லாவற்றையும் ரசிப்பார். உங்கை பாற்றாபாற்றா என்று அவர் சொல்ல, ஒருவர் சைக்கிளைச் சுற்ற மற்ற நாலு பேர் ஆடுவார்கள். பிறகு ஆடின மற்றவர் சைக்கிளைச் சுற்ற, அதுவரை சுற்றிய இவர் போய் ஆடுவார். இப்படியாக சிறுவர் முதல் பெரியோர் வரை அவர்களை ரசித்துப் பார்ப்பார். உண்மையில் அவரோடு பழகிய நாட்கள் ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தின. நாங்கள் எல்லோரும் நன்றாக வரவேண்டும் என்ற அவரின் மனப்பூர்வமான ஆசீர்வாதமும், நாங்கள் சாதிக்கவேண்டும் என்று அவர் விரும்பியதும் எமக்கு மிகுந்த உத்வேகத்தைக் கொடுத்தது. இந்த நேரத்தில் இவ்வளவற்றையும் நாங்கள் அங்கு செய்தோம், அவற்றை வெளியுலகிற்குக் கொண்டு போவதற்கு எமது தேசிய விடுதலைப் போராட்டம் உறுதுணையாக இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அடுத்து புதுவை இரத்தினதுரை அண்ணா.

நல்லை முருகன் பாடல்கள் இப்போது புலம்பெயர்ந்த நாடுகளில் மிகவும் பிரபல்யமாக இருக்கின்றது. நல்லை முருகன் பாடல்கள் எப்படி உருவாகின என்று சொன்னால் நல்லலூரின் 25 நாட் திருவிழா நடக்கும் காலத்தில் புதுவை அண்ணாவும், – நானும், மற்றும் சில நண்பர்களும் நல்லூரின் வீதியிலே திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு அருகாமையிலே, மனோன்மணி அம்மன் கோயிலுக்கு முன்பாக நாங்கள் அந்த மணலிலே அமர்ந்திருப்போம். அப்போது இசை விழாவி;ல் படிக்கும் பாடல்கள் ஸ்பீக்கரிலே போய்க்கொண்டிருக்கும். அப்போது புதுவை அண்ணா மிகுந்த ஆதங்கத்தோடு சொன்னார். எடேய் இஞ்ச பார்ரா, இஞ்சை வந்து குண்டு விழுகுது, ஷெல் விழுகுது, இவங்கள் ஒருத்தருக்கும் இதைப் பற்றி ஒரு அக்கறையும் இல்லை, இருந்து தெலுங்கிலை பாடிக்கொண்டிருக்கிறாங்கள், உதெல்லாம் ஆருக்கு விளங்கும்? உதுகளும் இருந்து தலையாட்டிக் கொண்டிருக்குதுகள் என்று சொல்லி ஆதங்கப்பட்டார். அப்போது இசைவிழாவில் நான் கச்சேரி செய்கின்ற நாள் வருகின்றது. அப்போது நான் சொன்னேன் புதுவை அண்ணா! நாங்கள் இதை வித்தியாசமாகச் செய்வோம் என்ற போது அவர் சொன்னார், எங்களுடைய தேவார திருவாசகங்களிலே கூட எத்தனையோ விடுதலை உணர்வை வெளிப்படுத்தக் கூடிய பாடல்கள் இருக்கின்றது. நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் அப்படிப் பல பாடல்கள் இருக்கின்றன. அவற்றைக் கூட இவர்கள் எடுத்துப் பாடியிருக் கலாமே என்று ஆதங்கப்பட்டார். அப்போது நான் சொன்னேன்,நீங்களே எழுதுங்களேன், நாங்கள் அவற்றைப் படிப்போம் என்று. எங்களுடைய இசைக் கலைஞர்களிடம் போய்க் கேட்டபோது இல்லையில்லை சங்கீதம் என்றால் இப்படித்தான் பாடவேணும், இப்படியெல்லாம் செய்ய முடியாது என்ற போது நாங்கள் சவாலாக எடுத்து புதுவை அண்ணா பாடல்கள் எழுத நான் எனது கச்சேரியில் பாடினேன். பின்பு எங்கள் ஆசிரியர் என்.வி.எம்.நவரட்ணம் அவர்கள் கூட இவற்றை எடுத்துப் பாடினார். அதன் பின்னர் அதே இசைவிழாவின் இறுதி நாள் நிகழ்வென்று நினைக்கின்றேன். எங்களுடைய பொன். சுந்தரலிங்கம் அண்ணா அவர்கள் கூட சில பாடல்களை எடுத்துப் பாடியிருந்தார். அதன் பின் புதுவை அண்ணாவின் நினைவழியா நாட்கள் நூலின் வெளியீட்டு விழாவில் இந்தப் பாடல்கள் பன்னிரண்டைச் சேர்த்து என்.வி.எம். நவரட்ணம் ஆசிரியர் அவர்களும் நானும் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியிருந்தோம். அதன் பின்பு தான் இந்தப் பாடல்களை ஒரு ஒலித்தட்டாகப் போட எண்ணி கண்ணன் மாஸ்டரைக் கூப்பிட்டு, ஏற்கனவே மெட்டுப் போட்டுப் பாடிய பாடல்களை இடையிசை, முன்னிசை எல்லாம் சேர்த்து ஒரு ஒலித்தட்டாக வந்தது. ஆனால் நாங்கள் செய்யும் போது இந்தப் பாடல்கள் வெளிநாடுகளுக்கும் பரவி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்துச் செய்யவில்லை. இப்போது ஒவ்வொரு நல்லூர் திருவிழாக் காலங்களிலும் ஒலிக்கின்ற பாடல்களாக இவை மாறிவிட்டன. அதன் பின்பு நாங்கள் திசையெங்கும் இசை வெள்ளம் என்னும் இசைத் தட்டையும் வெளியிட்டோம். அது ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு பாடல்களாக வந்தது.

(நல்லை முருகன் பாடல்கள் இறுவட்டிலிருந்து செந்தமிழால் உந்தனுக்குபாட்டைப் பாடுகிறார்)

கேள்வி: கவிஞர் காசி ஆனந்தன் பாடல்களுக்கு நீங்கள் குரல் கொடுத்த அனுபவம் குறித்து?

பதில்: எப்படியென்று சொன்னால், எமது இடப்பெயர்வின் பின்பு நான் மேற்படிப்புக்காகத் தமிழகம் சென்று ஒரு இரண்டரை ஆண்டுகள் அங்கே தங்கியிருந்தேன். அப்போது அடிக்கடி நான் காசி ஆனந்தன் அண்ணாவின் வீட்டுக்குப் போவேன். அப்போது நான் மாமிசம் எல்லாம் சாப்பிடுவதில்லை. அப்ப என்ன செய்வாரென்றால் எனக்காக தானே தன் கையால் உருளைக்கிழங்கு பிரட்டல் கறி வைப்பார். அருமையாக இருக்கும், மறக்கமுடியாது அதை. ஏனென்றால் அப்போது அவருடைய துணைவியார் வேலைக்குப் போய் விடுவார். அப்போது எமது நாட்டு விடயங்களையெல்லாம் கேட்டு, தன் அனுபவங்களையும் சொல்லி வைப்பார். தம்பி உனக்காக வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் சொல்ல மெட்டு ஒன்றைக் கொடுத்தேன். அப்போது முதல் தடவையாக மெட்டுக்குப் பாட்டு எழுதுவது என்பதே என்னுடைய பாட்டுக்குத் தான் செய்தார். போர்க்களத்திலே வெற்றி பெற்று எங் களுடைய வீரர்கள் காடுகளுக்குள்ளால் வருவது போன்ற கற்பனை அது. எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல் அப் போது நான் மாயாமாளவகௌளை ராகத்தில், அதாவது எங்க ளுடைய சங்கீதத்தைப் பயில நாம் ஆரம்பித்ததில் கையாளும் ராகம் அது, அதில்தானனன்னதானனன்னதானனன்னதானனன்னதானனன்னதானனன்ன… (தொடர்ந்து மெட்டைப் பாடுகின்றார்) இது பல்லவியாக வந்தது. தம்பி நாலைந்து முறை இதை பாடும் என்று அவர் சொல்ல நான் பாட,பொங்கியெழும் கடலலையை எதிர்த்து நின்று இங்கு களம் தனிலே வெறியர் படை தாக்க வருமா? இது பல்லவி. பிறகு லாலலல்லலாலலல்லலாலலல்லலாலல்லலாஎன்று நான் கொடுக்க எங்கள் தமிழ்த் தாயகத்தை மீட்கும் வரை எங்கள் இரு கண்களிலே தூக்கம் வருமா? இப்படி உடனே எழுதினார், அவருடைய கற்பனைக்குள் வார்த்தைகளைப் பாவித்த விதம் பிர மிக்க வைத்தது. உண்மையில் அவர்கள் வாழும் காலத்தில் நாங் களும் வாழ்ந்தோம், வாழ்கின்றோம் என்பது ஒரு பெரும் பேறென்று தான் சொல்லவேண்டும்.

நீங்கள் தாயகத்திலே இருந்த காலப்பகுதியில் இணைந்து பணி யாற்றிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைவாணர் கண்ணன் அவர்கள். அவர் குறித்த உங்கள் உள்வாங்கல் எப்படியிருக்கின் றது? கண்ணன் மாஸ்டரிடம் கற்றுக் கொண்ட விடயங்கள் நிறையவே இருக்கின்றன. அவருடைய சிறந்த குணம் என்னவென்றால் ஒருத் தரையும் வந்து உதாசீனப்படுத்தமாட்டார். அவரோடு பழகும் போது மிகவும் நகைச்சுவையாக இருக்கும். எல்லோருடனும் பகிடி விட்டுத் தான் கதைப்பார். ஒலிப்பதிவு வேளையில் அவரோடு கலந்து கொண்ட அனுபவங்களை நினைக்கையில் சந்தோஷமாக இருக்கும். அண்ணை, இப்படியொருத்தர் தபேலா வாசிப்பார் என்று சொன்னால்! தபேலா வாசிப்பாரா? என்று கேட்டு விட்டு அவரின் வாசிப்பைக் கேட்டு, ஒலிப்பதிவு வேளையில் அந்தக் கலைஞரை எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படிப் பயன்படுத்துவார். மனம் நோகடிக்க மாட்டார். தம்பி! இப்படியெல்லாம் வாசிப்பது சரி வராது. நீ போ என்று யாரையும் அவர் திருப்பி அனுப்பியதாக வரலாறு இல்லை என்றே சொல்வேன். நாங்கள் இப்போது சில வேலைகளைச் செய்யும் போது அவரை நினைக்கின்றோம் இல்லையா? எங்களிடமிருந்தும், மற்றவர்களிடம் இருந்தும் எப்படியெல்லாம் வேலை வாங்கினார் என்பதை நினைக் கும் போது அந்த அனுபவங்கள் எங்களுக்கூடாகவும் வருகின்றது. அந்த அனுபவத்தைக் கற்றுத் தந்தவர் கண்ணன் மாஸ்டர். அதை விட எல்லா வாத்தியங்களையும் வாசிக்கக் கூடிய தன்மை வாய்ந்தவர் இவர். பாடுவார். வாத்தியக் கருவிகளில் சித்தார் என்றாலும் சரி, சாய்வாயா என்று ஒரு வாத்தியத்தை வாசிப்பார். அந்த வாத்தியத்தை கண்ணன் மாஸ்டரைத் தவிர நான் கேட்டு அறியவில்லை. மண்டலின் போன்ற வாத்தியம் அது. மிகவும் அருமையாக வாசிப்பார். இப்படியான கலைஞர்களை எமது சமுதாயத்தின் வறுமை காரணமாக, பொருளாதார ரீதியான வறுமையை நான் சொல்லவில்லை, இவர்களை நாம் சரியாக இனங்காட்ட வில்லை என்றே நான் சொல்வேன். ஒரு அற்புதமான கலைஞர்.

கேள்வி: அவருடைய திறமையை எமது போராட்டக் களமும் நன்கு பயன் படுத்தி இப்படியான பாடல்களைத் தருவித்ததும் நம் காலத்தில் செய்த பெரிய விடயம் இல்லையா?

பதில்: நிச்சயமாக, ஆனால் கண்ணன் மாஸ்டரின் திறமையை நாம் இன் னும் முற்று முழுதாகக் கொண்டுவரவில்லை என்றும் சொல்ல வேண்டும். அதற்கு சில வசதியீனங்களும் எமது நாட்டுக்குள் இருந்ததையும் கூடச் சொல்லலாம். மின்சாரம் இல்லை. ஒலிப்ப திவு செய்வது என்று சொல்வதென்றால் ஸ்பூன் மெஷினில் நாங்கள் ரெக்கோர்டிங் செய்யும் போது ஒரு ரேப்பையே கிட்டத்தட்ட ஏழெட்டு ஒலிப்பதிவு நாடாக்கள் உருவாவதற்கு பாவித்திருக்கின்றோம். கரும்புலிகள் தொடக்கம் பல இசைத் தட்டுக்கள் தொடங்கிய வரலாறு அப்படித்தான் இருந்தது. ஒரு பாடல் தொகுதி ஒலிப்பதிவு செய்து முடிந்த பின், மாஸ்ரர் கசற்றில் ரெக்கோர்ட் பண்ணி வைத்து விட்டு அதை அழித்து திருப்பி புதுப்பாடல்களை ரெக்கோர்ட் பண்ணுவது. அப்போது தரம் போய் விடும். அப்படியான வசதியீனங்களுக்கு மத்தியில் தான் எமது ஒலிப்பதிவு எல்லாம் நிகழ்ந்தன. அப்படியான சூழ்நிலையிலே பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.

கேள்வி: உங்களுடைய இசைப்பயணத்திலே, தாயக எழுச்சிப்பாடல்களில் உங்களால் முதன் முதலில் பாடப்பட்ட பாடலெது?

முதன் முதலில் பாடிய பாடல் மாவீரர் துயிலும் இல்லப் பாடல். ஆனால் வெளிவந்த பாடல்தாயக மண்ணின் காற்றே என்ற பாடல். மாவீரர் துயிலும் இல்லப் பாடலை அந்த நாளைத் தவிர வேறு நாளில் நான் பாடுவதில்லை.

கேள்வி: இதற்கு இசை வடிவம் கொடுத்தவர் யார்?

பதில்: கண்ணன் மாஸ்டர் தான் இதை இசையமைத்திருந்தார்.

கேள்வி: நீங்கள் இப்போது பாடிய பாடல் ஒரு பாணி, நல்லை முருகன் பாடல்கள் இன்னொரு வகை, அப்புஹாமி போன்ற பாடல்கள் வேறோர் வகை. இப்படி எழுச்சிப் பாடல்களிலேயே வித்தியாசத்தைக் காட்டியிருக்கின்றீர்கள். உங்களுக்குச் சவாலாக அமைந்த பாடல் எது?

பதில்: சவால் என்று எதையும் தனிப்பட்டுக் குறிப்பிட முடியாது, எல்லாமே சவாலான பாடல்கள் தான். சவாலாக எடுத்தால்தான் அதனுடைய முழுமையைக் கொண்டுவர முடியும். அந்த வகையில் எல்லாப் பாடல்களிலுமே அவற்றின் நுட்பத்தை உணர்ந்து கொண்டு வரவேண்டும். சில பாடல்களை நாம் ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட பின்னர் மேடையில் பாடுவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.இடையிலே வந்து பாட முடியாமற் போன பாடல், அப்படியெல்லாம் இருக்கின்றது. ஒலிப்பதிவு என்பது மீளவும் பயிற்சி செய்து கொடுப்பதால் எல்லாப் பாடல்களிலும் அப்படியான தன்மை இருப்பதாகவே நான் கூறிக் கொள்வேன்.

கேள்வி: பொதுவாக திரையிசைப் பாடல்களோ, வீடியோ அல்பங்கள் என்று சொல்லும் பாடல்களோ பாடலைக் கேட்பது மட்டுமல்ல கண்ணுக்கு விருந்தாக அவை காட்சி வடிவம் பெறும் போது இன்னும் இன்னும் பலருடைய அபிமானத்தை அவை பெறும். ஆனால் எமது எழுச்சிப் பாடல்கள் ஆரம்ப காலப் பகுதியிலே வெறும் ஒலிப் பேழைகளாக மட்டும் தான் இருந்திருக்கின்றன. ஆனால் பலருடைய உள்ளங்களிலே இப்படியான பாடல்கள் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் திரையிசைப் பாடல்களுக்கும் மேலாக நேசிக்கப்பட்டிருக்கின்றன. உங்களால் இப்படி மறக்கமுடியாத ரசிகர் அல்லது நிகழ்வு என்று இருக்கின்றதா? நிச்சயமாக, இரண்டு மூன்று பாடல்கள் அப்படி இருக்கின்றன. ஒன்று வந்து நாம் இடம்பெயர்ந்து வந்தபோது நண்பர் சடகோபனும், நானும் இணைந்து எழுதிய பாடல். அது வேப்ப மரக்காற்றே நில்லு எனும் பாடல் அது. இடப்பெயர்வை அனுபவித்த அத்தனை பேருக்கும் அதன் வலி புரியும். இதுதான் பாடல் வரிகள்:

தந்தானானே தானேனானேனா….ஓஓ

தந்தானானே தானேனானேனா

வேப்ப மரக்காற்றே நில்லு…..

வேலியோரப் பூவே சொல்லு….

தோப்புக்குயில் பாடுவதுஜீவகானமா..?

இல்லைவேதனையில் வாடும் எங்கள் தேசராகமா…?

வேப்பமரக் காற்றே நில்லு….

உற்றமும் ஊரும் திரிந்து

ஒற்றை மர நிழலிருந்து

முற்றத்துப் பாயில் போட்ட

முத்தான நெல் மறந்து..

குட்டியாடு கட்டி நிற்க விட்டு வந்தோமே

நாங்கள் கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே…..

நாங்கள் கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே

வேப்ப மரக்காற்றே நில்லு.. வேலியோரப் பூவே சொல்லு..

 நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி

வாடும் வயிற்றை என்ன செய்ய

காற்றையள்ளித் தின்று விட்டு

கையலம்பத் தண்ணீர் தேட..

 பக்கத்திலே குழந்தை வந்து பசித்து நிற்குமே

அதன் பால்வடியும் முகம் அதிலும் நீர் நிறையுமே….

அதன் பால்வடியும் முகம் அதிலும் நீர் நிறையுமே….

 வேப்ப மரக்காற்றே நில்லு…. வேலியோரப் பூவே சொல்லு….

தோப்புக்குயில் பாடுவது ஜீவகானமா?

இல்லை..வேதனையில் வாடும் எங்கள் தேசராகமா..?

வேப்பமரக் காற்றே நில்லு….

தந்தானானே தானேனானேனா….ஓஓ தந்தானானே தானேனானேனா

கேள்வி: உண்மையிலேயே இடப்பெயர்வைச் சந்திக்காதவர்களைக் கூட அந்த வலியை வரிகளிலும் பாடும் தொனியிலும் கொடுத்திருக்கின்றீர்கள், பழைய நினைவுகளும் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. இந்தப் பாடலை அந்தக் களத்தில் இருந்து அந்த வேதனையோடு கொடுத்ததால் தான் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கின்றது இல்லையா?

பதில்: நிச்சயமாக. நாம் இடப்பெயர்வைச் சந்தித்த வேளை எங்களுடைய நண்பர் ஒருவர் ஒரு மரத்திலே தனது துணைவியாரின் சேலையைக் கட்டித் தொங்க விட்டு விட்டு அதற்குள் பிள்ளையைப் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது தான் இவை வந்தது. அப்போது காசு இருந்தவர்களுக்குக் கூட பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை இருந்தது. எங்கே போய்த் தங்குவது என்பது யாருக்குமே தெரியாது. எங்கே போகப் போகின்றோம், என்ன நடக்கப் போகின்றது என்பதே தெரியாத சூழ்நிலையில் வந்த அனுபவம். யாராலும் மறக்கமுடியாத ஒரு கனத்த அனுபவம். பெரியவர்கள் சாப்பிடாமல் பசியோடிருந்து தாங்கமுடியாத வேதனையில் இருந்த போது குழந்தைகள் வந்து ஐயோ அப்பா பசிக்குது! அம்மா பசிக்குது! என்று கேட்கையில் அதை அருகில் இருந்து பார்த்திருக்கின்றேன். இந்தப் பாடலைப் பின்னர் மேடையில் பாடும் போது என்னால் பாட முடியாமல் போயிருக்கின்றது. இப்பவும் கூட அந்த நினை வுக்குள் போன பின்னர் என்னால் கதைக்கவே முடியாமல் இருக்கின்றது.

கேள்வி: இப்படியான பல பாடல்களைத் தாயகத்தில் இருந்த காலத்தில் கொடுத்திருக்கின்றீர்கள், அது வெறும் முற்றுப்புள்ளியாக இருந்து விடவில்லை. நீங்கள் புலம்பெயர்ந்த பின்னர் கூட நம் தாயகக் களத்தில் இருப்பவர்களுக்கான உற்சாகமூட்டும் பாடல்களோ அல்லது புலம்பெயர்ந்த மக்களுக்கான எழுச்சிப் பாடல்களாக கொடுக்கின்றீர்கள். புலம்பெயர்ந்த களம் இப்படி எந்தெந்த வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது?

பதில்: எங்களுக்கான சில பணிகள் இருக்கின்றன. நாம் நடந்து வந்த பாதையை மறக்க இயலாது, மறக்கவும் கூடாது. நாங்கள் இங்கே வந்துவிட்டோம். எங்களுடைய உறவுகள் நாளும் அந்தக் கொடு நிகழ்வுகளுக்குள் சிக்கித் தவிக்கின்றார்கள். எனவே நாங்கள் இங்கிருந்து என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைச் செய்ய வேண்டிய காலத்தில் நாம் இருக்கின்றோம். எனவே என்னால் முடிந்த அளவிற்கு இங்குள்ள நிகழ்வுகளில் எங்களுடைய வலிகளை, வரிகளாக்கிப் பாடுவது தான் என்னுடைய காலத்தின் பணியென்பேன். கலைஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி என்பார்கள். ஏற்கனவே எப்பவோ நடந்த, யாருக்காகவோ எழுதிய பாடல்களை எங்களின் இனம் அழிந்து கொண்டிருக்கும் போதும் பாடிக் கொண்டு இது தான் இசையென்பதை நான் ஏற்கமாட்டேன். சமகாலத்தைப் பிரதிபலிக்காத எந்தக் கலையும், எந்தக் கலைஞனும் மக்கள் மனங்களிலே இடம்பெற்று வாழ முடியாது என்பது என் கருத்து. இந்த வகையில் நான் கனடா தேசத்தில் இருந்தாலும் கூட என்னுடைய நிகழ்வுகளில் நானே பாடல்களை எழுதி குறிப்பாக பாலா அண்ணாவுக்கு முதன் முதலில் பாடல்களை எழுதிப் பாடி வெளியிட்டேன். அதே போல் தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும் அப்படியே தான். ஏற்கனவே பழகிய கவிஞர்களுடனான அனுபவங்களும், எழுதும் ஆற்றலும் இருப்பதனால் இப்பொழுது எனது தேவைக்கு உடனே நானே எழுதிப் பாடுகின்றேன்.

கேள்வி: அத்தோடு இசைக்கு ஏது எல்லை என்னும் நிகழ்விலும் உங்களை ஈடுபடுத்தி வருகின்றீர்கள். இல்லையா?

பதில்: வைரமுத்து சொர்ணலிங்கம் அண்ணாவின் ஒழுங்கமைப்பில் நடந்து வருகின்றன. அந்த நிகழ்வுகள் பலவற்றில் பாடியிருக்கின்றேன். வரும் ஜூன் முதலாம் திகதி கூட ஒரு நிகழ்வு நடக்க இருக்கின்றது. அதை விட இங்கே நடைபெறும் நடன அரங்கேற்றம், இசைக் கச்சேரிகளிலும் பாடி வருகின்றேன். அண்மையில் நடனத்துக்காக நான் உருவாக்கியிருக்கும் பாடல் இன்றைய நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றது. இப்பாடலை நடனம் செய்பவர்கள் இதைப் பயன்படுத்தலாம். இப்பாடல் ஹம்சானந்தி ராகத்தில் அமைந்தது. அதாவது எமது உறவுகள் படும் இன்னல்களை மறந்து நாம் இன்னும் இருப்பதா என்னும் தொனியில் அமைந்த பாடல். இதில் சரணத்தில் வரும்

தோம் தோம் தோம்….தமிழரென இணைந்தோம் நாம்’‘தா தி தொம் நம் உறவைக் காப்போம் வா..

அதில்தா தி தொம் நம் என்பது மிருதங்கத்திலே வரும் ஆரம்ப சொற்கட்டுக்கள். தில்லானாவின் சாயல் உள்ளே வருவது மாதிரி இருக்கும். ஒரு எழுச்சித் தன்மையோடு இப்பாடல் அமைகின்றது.

ஈழத்தின் அழுகுரல் செவிகளில் கேட்கிறதே…’ (என்று தொடர்ந்து பாடுகிறர்.)

கேள்வி: சிரமம் பாராது இந்த நீண்டதொரு நேர்காணலை அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

பதில்: உண்மையில் எங்களுடைய காலகட்டத்து அனுபவங்கள் வித்தியாசமானவை. அவற்றை இந்த ஒரு பேட்டியில் முடிக்க முடியாது. மற்றக் கலைஞர்கள் பலரைச் சேர்த்து இன்னும் பல பேட்டிகளில் கொடுக்கும் போதே அவை முழுமை பெறும். எமது வரலாறு பெரியது, அதில் எம் துயரம் சிறியது. தவறவிட்டவற்றை மீண்டும் ஒரு சந்தர்ப்பத்திலே நாம் பேசிக் கொள்வோம்.

கேள்வி:உங்கள் இசைப்பயணத்தில் இன்னும் பல அங்கீகாரங்களையும், நம் தாயக தேசத்தின் விடுதலையின்பால் நீங்கள் கொண்ட நேசமும் நிறைவேற வாழ்த்தி விடைபெறுகின்றேன்.  மேலதிகமான தேடல்களுக்கு இதனை பார்வையிடலாம்.    https://studio.youtube.com/video/c3Q77fVco6c/edit   

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!